மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் ஆகியோர், சனிக்கிழமை நடைபெற்ற வெவ்வேறு விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் தங்களது முதல் 'லிஸ்ட் ஏ' (List A) சதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளனர். நீண்ட காலமாக உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்தாலும், ஒருநாள் வடிவிலான போட்டிகளில் (List A) இவர்கள் இருவரும் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் பரோடா மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் பரோடா அணிக்காக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி, ஒரு கட்டத்தில் 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பெரும் தடுமாற்றத்தில் இருந்தது. அப்போது 7-வது வீரராகக் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, அணியை மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்றார்.

ஆரம்பத்தில் நிதானமாக ஆடி 44 பந்துகளில் அரைசதம் கடந்த ஹர்திக், பின்னர் விஸ்வரூபம் எடுத்தார். வெறும் 68 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆட்டத்தின் 39-வது ஓவரை விதர்பா வீரர் பார்த் ரெக்கடே வீசினார். அந்த ஓவரில் மட்டும் ஹர்திக் பாண்டியா 5 இமாலய சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 34 ரன்களை விளாசித் தள்ளினார்.
விஜய் ஹசாரே வரலாற்றில் இது மூன்றாவது அதிகபட்ச ஓவர் ஸ்கோர் ஆகும். ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்கும் போது 92 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 133 ரன்களைக் குவித்திருந்தார். இதற்கு முன் 92 ரன்கள் எடுத்ததே இவரது அதிகபட்சமாக இருந்தது.
மறுபுறம், பெங்களூருவில் குஜராத் மற்றும் ஆந்திரா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், குஜராத் அணிக்காக அக்சர் படேல் களமிறங்கினார். இடதுகை பேட்ஸ்மேனான அக்சர் படேல், ஆந்திரா பந்துவீச்சாளர்களை சமாளித்து விரைவாக ரன் குவித்தார். 98 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் தனது சதத்தை எட்டினார்.
இதற்கு முன்பு 12 முறை அரைசதம் அடித்துள்ள அக்சர் படேல், அதிகபட்சமாக 98 ரன்களில் (நாட்-அவுட்) நின்று சதத்தைத் தவறவிட்டிருந்தார். இன்று அந்தத் தடையை உடைத்து, 130 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் இந்த சீசனில் இவர்கள் விளையாடும் முதல் போட்டி இதுவே ஆகும். நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலிருந்து இருவருக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ஒரே நாளில் இருவரும் சதம் விளாசித் தங்களது ஃபார்மை நிரூபித்திருப்பது தேர்வுக்குழுவினரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.