மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் உடனான விவாகரத்தை நேற்று அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி இவர்களுக்கு நடுவில் என்னதான் நடந்தது?
2018 ஆம் ஆண்டில் தான் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர். அப்போது ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் நிலையான இடத்தை பிடித்து இருக்கவில்லை. அந்த சமயத்தில் செர்பிய மாடல் மற்றும் நடிகையான நடாஷா உடன் அவர் பார்ட்டிகளுக்கு சென்றது பேசு பொருளானது. இந்த நிலையில் 2020 புத்தாண்டு அன்று ஹர்திக் பாண்டியா, நடாஷாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

குடும்பத்தினர், நண்பர்கள் என யாரும் இன்றி தனியாக கடலுக்கு நடுவே ஒரு படகில் வைத்து அவர் மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தத்தை அறிவித்தார். அது அப்போது மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது. பின்னர் 2020 மே மாதம் கொரோனா காலகட்டத்தில் ஹர்திக் மற்றும் நடாஷா குஜராத்தில் தங்கள் வீட்டிலேயே மிகவும் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த சில நாட்களிலேயே தாங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக அறிவித்தனர்.
2020 ஜூலை மாதம் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார். அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. பின்னர் 2023 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று, ஹர்திக் பாண்டியா மீண்டும் நடாஷாவை விமரிசையான முறையில் திருமணம் செய்து கொண்டார். அதற்காக பல கோடிகள் செலவு செய்யப்பட்டது அப்போது பலரையும் வியப்புக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் அவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா காயத்தால் விலகினார். அதன் பின்னர் அதில் இருந்து மீண்டு அணியில் இடம் பெற பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார்.
இதனிடையே நடாஷா, ஹர்திக் பாண்டியா உடனான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கினார். அப்போது இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இந்த நிலையில் நேற்று தாங்கள் இருவரும் பிரிவதாக ஒன்றாக அறிவித்துள்ளனர். தங்கள் மகன் அகஸ்தியாவுக்காக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என அறிவித்து பிரிந்துள்ளனர். இதை அடுத்து, ஹர்திக் - நடாஷா இரண்டு முறை திருமணம் செய்து கொண்டது எல்லாம் விவாகரத்து செய்யத் தானா? என ரசிகர்கள் சோகத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.