மும்பை: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு வழங்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால், வீரர்களின் வேலைப்பளுவை குறைக்க அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தீவிரமாக உள்ளன. அந்த வகையில் பிசிசிஐ-யும் வீரர்களின் வேலைப்பளுவை குறைக்க ஆலோசித்து வருகிறது. குறிப்பாக 3 வகையான கிரிக்கெட்டையும் விளையாடும் வீரர்களை ஆசிய கோப்பை தொடருக்கு தயார்ப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சன் தன்னை நிரூபிக்கும் பட்சத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த வாய்ப்பை தவறவிட்டால், உலகக்கோப்பை தொடர் வரை இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை.
உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷமி, பும்ரா, சாஹல், சிராஜ் ஆகியோருக்கு உறுதியாக இடம் கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள பேக் அப் வீரர்களுக்கான போட்டிக்கு இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் போட்டியில் இருக்கின்றனர்.
அதில் ஷர்துல் தாக்கூர் மற்றும் அக்சர் படேல் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் 3வது ஸ்பின்னராக குல்தீப் யாதவும் இடம்பிடிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரில் யார் ஆசியக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படுகிறார்களோ, அவர்களே உலகக்கோப்பை அணியிலும் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.