ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணி தாங்கள் ஏன் ஒரு நடப்பு சாம்பியன் என்பதை இன்று மீண்டும் நிரூபித்துள்ளது. ராஜஸ்தான் அணியை அவர்களது சொந்த ஊரான ஜெய்ப்பூரில் ஹர்திக் படை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற ரிஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஜாஸ் பட்லர் 8 ரன்களில் பெவிலியன் திரும்ப, ஜெய்ஷ்வால் 14 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 30 ரன்கள் எடுத்து, அவரும் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் நோக்கி அணி வகுப்பு நடத்தினர். படிக்கல் 12 ரன்களிலும், அஸ்வின் 2 ரன்களிலும், ரியாடன பராக் 4 ரன்களிலும், ஷிம்ரன் ஹெட்மயர் 7 ரன்களிலும், துருவ் ஜூரல் 9 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.
இதனால் ராஜஸ்தான் அணி 17.5வது ஓவரில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் பந்துவீச்சில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். இதனையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய சாஹா 34 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும் அடங்கும். மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 36 ரன்கள் எடுக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா, தன் மீதான விமர்சனத்துக்கு பேட்டிங்கில் பதிலடி அளித்தார்.15 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.