மும்பை : கடினமாக உழைத்தால் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து விடலாம் என்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஒரு நல்ல உதாரணமாக இருக்கின்றார்.
எந்த மக்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக குரல் கொடுத்தார்களோ, அதே ஊரில் தம்மை வாழ்த்தும் வகையில் ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். ஹர்திக் பாண்டியாவுக்கு கிரிக்கெட்டிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் இருக்கிறது.

எனினும் அதையெல்லாம் மீறி தற்போது வெற்றியாளராக வலம் வருகின்றார். 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ஹர்திக் பாண்டியா இல்லாதது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அப்போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, ஆறு மாதம் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காமல் ஐபிஎல் தொடருக்கு தான் திரும்பினார்.
அந்த ஐபிஎல் தொடரில் கூட ஹர்திக் பாண்டியா கடும் விமர்சனங்களை சந்தித்தார். எனினும் தொடர்ந்து உழைத்து வந்த ஹர்திக் பாண்டியா, இன்று t20 உலக கோப்பையை வென்றிருக்கிறார். இந்த சூழலில் ஹர்திக் பாண்டியாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் காயத்தால் அவதிப்பட்டபோது ஹர்திக் பாண்டியா தொப்பை உடன் காட்சியளிக்கிறார்.
ஆனால் ஆறு மாதத்திற்கு பிறகு கடின உடற்பயிற்சி மூலம் தனது உடம்பை கட்டுமஸ்தான் போல் மாற்றி இரும்பு போல் காட்சியளிக்கிறார். இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா, என் வாழ்க்கையில் எப்போதெல்லாம் கஷ்ட காலம் வருகிறதோ அப்போதெல்லாம் நான் கண்ணை மூடிக்கொண்டு மணி கணக்கில் உழைப்பேன்.
நான் உழைப்பதன் மூலம் என்னுடைய கடின காலங்கள் என்னை விட்டு சென்று விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நம்பிக்கை மற்றும் உழைப்பு இவ்விரண்டும் என்னை பலமுறை காப்பாற்றி இருக்கிறது. நான் இன்று ஒரு நல்ல நிலையில் இருந்தால் அதற்கு காரணம் 10 ,12 வயதில் இருந்து ஹர்திக் பாண்டியா உழைத்ததுதான். எனவே உழைப்பை நான் என்றும் கைவிட மாட்டேன் என ஹர்திக் பாண்டியா கூறி இருந்தார். தற்போது அவருடைய உடம்பை பார்க்கும்போது அவர் எந்த அளவிற்கு உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி இருப்பார் என்று தெரியவந்துள்ளது.