லண்டன்: இந்தியா-வங்கதேசம் நடுவேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் டாசில் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. 31 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் அதன்பிறகு தமிம் இக்பால் மற்றும் முஸ்பிகுர் ரஹிம் இருவரும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஆனால் தமிம் 16 ரன்கள் எடுத்திருந்தபோதே அவரது விக்கெட்டை வீழ்த்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஹர்திக் 12.4வது ஓவரில் பாண்ட்யா வீசிய பந்தை புல்ஷாட் அடிக்க தமிம் முயன்றபோது, பேட்டில் பட்டு பந்து உள்ளே வந்து ஸ்டெம்பில் அடித்தது. இதனால் இந்திய வீரர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனால் நடுவரோ அதை நோ-பால் என அறிவித்தார்.
ஹர்திக் பாண்ட்யா கிரீசுக்கு வெளியே காலை வைத்து பந்தை வீசியிருந்தது தெரியவந்தது. அப்போது வங்கதேசம் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து ஃப்ரீஹிட் கொடுக்கப்பட்டது. அந்த பந்தை வைடாக வீசினார். எனவே அடுத்த பந்தும் ஃப்ரீஹிட்டானது. அதில் தமித் பவுண்டரி விளாசினார்.