மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வரும் வீரர் என்றால் அது ஹர்திக் பாண்டியா தான். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் களத்திலும் சரி அவர் இந்த ஆறு மாதத்தில் பல சிக்கல்களை சந்தித்து இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பிறந்து தன்னுடைய திறமையால் உச்சம் தொட்டவர். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அவர் எப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வந்தாரோ அப்போதிலிருந்து அவருக்கு சிக்கல் ஆரம்பித்து இருக்கிறது.

இந்த நிலையில் தமக்கு ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகள் குறித்து ஹர்திக் பாண்டியா, முதன்முறையாக மௌனத்தை கலைத்துள்ளார். அதில் அவர் என்ன பேசி இருக்கிறார் என்று தற்போது பார்க்கலாம். ஹர்திக் பாண்டியா ஆகிய நான் பிரச்சனைகளில் இருந்து ஓட மாட்டேன். நிச்சயம் தொடர்ந்து உழைப்பேன். ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள். கடின உழைப்பு என்றுமே வீணாகப் போகாது.
சில சமயம் வாழ்க்கை நம்மை கடினமான சூழ்நிலைக்கு தள்ளும். இதற்காக களத்தை விட்டு வெளியேறினால், விளையாட்டில் இருந்து எனக்கு என்ன தேவையோ அது கிடைக்காது. பிரச்சனைகள் இருக்கும் போது நமது உழைப்பை அதிகப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் நல்ல விஷயங்களும், நடக்கும் கெட்ட விஷயங்களும் நடக்கும். இது போன்று பல சிக்கல்களை என் இளம் வயதில் இருந்தே நான் சந்தித்து வருகின்றேன்.
என்னுடைய வெற்றிகளை நான் என் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். நான் என்ன செய்தேனோ அதனை அப்படியே விட்டு விட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுவேன். நிச்சயமாக இதுவும் கடந்து போகும். இதுபோன்ற சிக்கல்களில் இருந்து வெளியே வர ஒரே வழி. விளையாட வேண்டும். உங்கள் திறமையை நம்பி உழைக்க வேண்டும்.
எனக்கு தற்போது 30 வயது ஆகிறது. நான் 16 வயதில் இருந்தபோது எப்படி இருந்தேனோ, அதைவிட தற்போது நான் நல்ல நிலைமையில் இருக்கின்றேன். நான் இப்போது நல்ல நிலைமையில் இருக்க காரணம். அந்தப் 16 வயது ஹர்திக் பாண்டியா தான். ஏனென்றால் அவன் கடுமையாக உழைத்து நான் தற்போது நல்ல நிலைமையில் இருக்க காரணமாக இருக்கின்றான். தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை சமாளிக்க மீண்டும் நான் அந்த 16 வயது ஹர்திக் பாண்டியாவிடம் கேட்பேன்.
எப்படி நீ இதை செய்தாய்? எதற்காக இதை செய்தாய் என்று கேட்பேன். ஏனென்றால் அந்த பதினாறு வயது ஹர்திக் பாண்டியா தான் என்னுடைய குரு. அவன்தான் என்னை ஊக்கப்படுத்துவான். எனக்கு எந்த வசதியும் கிடையாது. இப்போது எனக்கு கிடைத்திருக்கும் அனைத்திற்கும் காரணம் என்னுடைய கடின உழைப்பு தான் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.