ரொம்ப நாளா சொல்லியும் கேக்கல..முக்கிய வீரரை கழட்டிவிட்ட பிசிசிஐ.. நியூ, டெஸ்டுக்கான அணியில் ட்விஸ்ட்
மும்பை: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ஹர்த்திக் பாண்டியா இடம்பெறாதது விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கி ஜூன் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அணி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின்னருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதற்காக 24 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்த்திக் பாண்டியாவின் பெயர் இடம் பெறவில்லை.

என்ன காரணம்
ஹர்த்திக் பாண்டியா பந்துவீசாமல் இருப்பதே இந்திய அணியில் இடம் பெறாததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் ஹர்த்திக் பாண்டியாவுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டிகள் எதிலும் பவுலிங் செய்யாமல் இருந்தார்.

காலில் காயம்
மருத்துவரின் அறிவுரையின் படி அவர் பந்துவீசவில்லை என கூறப்பட்டது. இதனால் 2020 ஐபிஎல் தொடர் முழுக்க இவர் பவுலிங் செய்யவே இல்லை. அதன்பின் ஆஸ்திரேலிய தொடரிலும், இங்கிலாந்து தொடரிலும் சில ஓவர்களை வீசினார். இதனை பார்த்த முன்னாள் வீரர்கள் சிலர், ஹர்த்திக் பாண்டியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக தயாராகி வருகிறார் என கூறிவந்தனர்.

இந்திய அணிக்கு பின்னடைவு
ஆனால் மீண்டும் 2021 ஐபிஎல் தொடரில் பந்துவீசவில்லை. இதனால் தற்போது பவுலிங்கிற்கு ஃபிட்டாக உள்ளாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பந்துவீசவில்லை என்றாலும் லோயர் ஆர்டரில் ஹர்த்திக் பாண்டியா அணிக்கு பக்கபலமாய் இருந்து வந்தார். எனவே தற்போது அவர் இங்கிலாந்து தொடரில் இல்லாது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications