3வது டி20 தொடர்
முதல் டி20 போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட சூழலில், 2வது டி20 போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆட்டம் மழையினால் பாதியில் நிறுத்தப்பட்ட போதும் சமனில் முடிவடைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சொதப்பல் பேட்டிங்
சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் சொதப்பியது. இஷான் கிஷான் 10, ரிஷப் பண்ட் 11, சூர்யகுமார் யாதவ் 13, ஸ்ரேயாஸ் ஐயர் 0 என அடுத்தடுத்து வெளியேறினர். இதன்பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 18 பந்துகளில் 30 ரன்களை அடித்து களத்தில் இருந்தார். சரியாக மழை குறுக்கிட்டு பாதிப்பை ஏற்படுத்தியது.
போட்டி முடிவு
நீண்ட நேரமாகியும் மழை நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 9 ஓவர்களில் 75 ரன்களை அடித்திருந்தால் சமனில் முடிவடையும். அந்தவகையில் இந்தியாவும் சரியாக 75 ரன்களை அடித்திருந்ததால் போட்டி சமனில் முடிவடைந்தது. இதனால் இந்திய அணி 1 - 0 என தொடரை கைப்பற்றியது.
பாண்ட்யாவின் பேச்சு
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து ஹர்திக் பாண்ட்யா நெகிழ்சியுடன் பேசினார். அதில், முழு ஓவர்களையும் ஆடி போட்டியை வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆனால் இந்த பிட்ச்-ல் அதிரடியாக ஆடுவதே பாதுகாப்பான ஒன்றாகும். அவர்களின் பவுலிங் அட்டாக் எங்களுக்கு நன்றாக தெரியும். விக்கெட்கள் விழுந்தாலும் அதிரடி காட்ட வேண்டும் என முடிவு செய்தேன்.
வீட்டிற்கு திரும்புகிறேன்
இந்த தொடருடன் நான் இந்தியாவுக்கு திரும்புகிறேன். வீட்டிற்கு செல்லப்போகிறேன். இனி கிரிக்கெட்டில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு என் மகனுடன் நேரத்தை செலவளிக்க முடிவெடுத்துள்ளேன் என ஹர்திக் பாண்ட்யா கூறினார். ஒருநாள் தொடரில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.