2வது டி20 போட்டி
ஹர்திக் பாண்ட்யா முதல் முறையாக கேப்டனாக செயல்படும் தொடரை வெல்ல வேண்டும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரவுள்ளார். ஓப்பனிங் வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் 2வது போட்டியில் இருந்து நீக்கப்படவுள்ளார்.
வலுக்கும் விமர்சனம்
இந்நிலையில் அவரின் இடத்திற்கு தான் பெரிய பிரச்சினை கிளம்பியுள்ளது. ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை என விமர்சனங்கள் குவிந்தன. எனவே இஷான் கிஷானுடன் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் ஆட வேண்டும் என திட்டம் உள்ளது.
மற்றொரு பிரச்சினை
மற்றொரு புறம் ஐபிஎல் தொடரில் நீண்ட வருடங்களாக கலக்கி வரும் ராகுல் திரிபாதிக்கு முதல் முறையாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும் இத்தனை நாள் காத்திருப்புக்கு ஒரு போட்டியிலாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. எனவே திரிபாதியை ஓப்பனிங் ஆட வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
மற்றவர்களை நீக்கலாமே?
இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதன்மை தேர்வாக உள்ளனர். எனவே அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தாக வேண்டும். தீபக் ஹூடா கடந்த போட்டியில் சிறப்பாக ஆடியதால், அவரை நீக்கவும் முடியாத சூழல் உள்ளது. எனவே யாரை தேர்வு செய்வது என்பதில் ஹர்திக் பாண்ட்யா குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.