டோணிக்கு பதில் ஹர்திக் பாண்ட்யா.. கும்ப்ளே முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
லண்டன்: இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான கிரிக்கெட் போட்டியின்போது, டோணிக்கு பதில் பாண்ட்யாவை களமிறக்கியது பயிற்சியாளர் கும்ப்ளே என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-பாகிஸ்தான் ஆடிய போட்டியில் யுவராஜை தொடர்ந்து டோணி களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் 47வது ஓவர் என்பதால் அதிரடியாக ரன் குவிக்க வேண்டிய சூழல் இந்தியாவுக்கு இருந்தது.
அந்த நேரத்தில் டோணிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். டோணிக்கு உள்நாட்டில் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் ரசிகர் பட்டாளம் உண்டு.

ரசிகர்கள் ஷாக்
உண்மையில் டோணி ஆட்டத்தையும், கோஹ்லி ஆட்டத்தையும் பார்க்கவே இரு நாட்டு ரசிகர்களும் பெரிதும் விரும்பினர். ஆனால் பாண்ட்யா களமிறங்கியது இரு நாட்டு ரசிகர்களுக்குமே கொஞ்சம் ஷாக்தான்.

கும்ப்ளே முடிவு
ஆனால் பாண்ட்யா கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை பறக்கவிட்டதன் மூலம், டோணி இடத்தை நிரப்பிவிட்டார் என்ற பெருமைக்கு வந்தனர் இந்திய ரசிகர்கள். ஆனால் டோணிக்கு பதில் பாண்ட்யாவை களமிறக்க கேப்டன் கோஹ்லி அறிவுறுத்தவில்லை. இதை செய்தது பயிற்சியாளர் அனில் கும்ப்ளே.

பாண்ட்யா பேட்டி
பாண்ட்யா ஐசிசிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார். அடுத்ததாக நான்தான் தயாராக இருக்க வேண்டும் என்பதே எனக்கு 46வது ஓவரில்தான் தெரியும். நீங்கள்தான் அடுத்து இறங்க வேண்டும், போங்கள், கால்காப்பை கட்டிக்கொள்ளுங்கள் (go pad up) என பயிற்சியாளர் சொன்னபோதுதான் நான் களமிறங்க வேண்டியது தெரியும்.

ரெடியாக கட்டளை
நான் உடனடியாக கால்காப்பை உடுத்திக்கொண்டு, கைகளுக்கு உறை அணிந்தேன். அப்போது யுவராஜ்சிங் அவுட்டானார். இதையடுத்து நான் களமிறங்கினேன். இப்போட்டியில் பெரும் பிரஷர் இருந்தது உண்மைதான். ஆனால் பிற போட்டிகளைபோலத்தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியையும் நான் எடுத்துக்கொண்டேன்.

கூலாக ஆடினேன்
நெருக்கடி அதிகமாக இருந்தால் நமக்கு இயல்பாக செய்ய முடிவதும் செய்ய முடியாமல் போய்விடுமம். எனவே நான் தேவையற்ற நெருக்கடிகளை தலைக்குள் ஏற்றிக்கொள்ளாமல் கூலாக விளையாடினேன். இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications