
ஆஸி, தொடர்
டெஸ்ட் தொடரை போலவே ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்க இந்திய அணி வீரர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தவுள்ளார். பேட்டிங்கில் சுப்மன் கில், இஷான் கிஷான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் என மிகவும் பலமாக உள்ள சூழலில் பவுலிங் துறை தான் குழப்பத்தில் உள்ளது.

பேட்டிங் வரிசை
வேகப்பந்துவீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, முகமது சிராஜ் என 3 பேர் உறுதியாகிவிட்டனர். இதே போல சுழற்பந்துவீச்சில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். ஆனால் மற்றொரு ஸ்பின்னராக எந்தவீரரை தேர்வு செய்வது என்பது தான் குழப்பமாக இருந்து வருகிறது. ஏனென்றால் அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் என 4 பேர் உள்ளனர்.

குழப்பத்தில் பாண்ட்யா
அக்ஷர் பட்டேல், ஜடேஜா போன்ற ஃபிங்கர் ஸ்பின்னர்கள் இருந்தாலும் அணிக்கு வ்ரிஸ்ட் ஸ்பின்னர்கள் நிச்சயம் தேவைப்படுவார்கள். எனவே குல்தீப் யாதவ் - யுவேந்திர சாஹல் ஆகிய இருவரில் இருந்து யாரோ ஒருவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கலாம். ஒருபுறம் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக சாஹலை தான் கோலி, ரோகித் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர். மற்றொருபுறம் காயத்தில் இருந்து திரும்பி வந்துள்ள குல்தீப் யாதவ் அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார். இருவருமே முக்கியமான கட்டங்களில் விக்கெட் எடுக்கும் திறமை உள்ளவர்கள் என்பதால் யாரை பாண்ட்யா தேர்வு செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ப்ளேயிங் 11 கணிப்பு
இஷான் கிஷான், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் / யுவேந்திர சாஹல்


Click it and Unblock the Notifications











