மும்பை: டி20 உலககோப்பை பிப்ரவரியில் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பு இந்தியா இன்னும் 10டி20 போட்டியில் தான் விளையாட உள்ளது. இந்த தருணத்தில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சையது முஷ்டாக் அலி தொடரில் களம் இறங்குவது உறுதியாகிவிட்டது. முழு உடல் தகுதியை எட்டியுள்ளதால், எதிர்வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ஷுப்மன் கில்லின் வருகை அவரது உடல் தகுதி பரிசோதனைகளை பொறுத்தே அமையும்.
கடந்த 2025 ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசத் தொடங்கிய ஹர்திக் பாண்டியா, ஒரு விக்கெட்டை வீழ்த்திய நிலையில், காயம் காரணமாக அவசர அவசரமாக களத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர், போட்டி முழுவதும் பங்கேற்கவில்லை. அன்று முதல், சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் கழித்தார்.

இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அக்டோபர் 21 முதல் நவம்பர் 30 வரை, ஹர்திக் மையத்தை விட்டு வெளியேறவே இல்லை. விளையாட திரும்புவதற்கான நடைமுறைகளை அங்கு நிறைவு செய்தார். தற்போது, டி20 போட்டிகளில் பேட் செய்யவும், பந்துவீசவும் அவருக்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது."
"அவர் ஏற்கனவே பஞ்சாப் போட்டிக்கு பரோடா அணியுடன் இணைந்துள்ளார். டிசம்பர் 4 அன்று குஜராத்துக்கு எதிராகவும், இந்திய அணி நிர்வாகம் முன்னதாக தேர்வு செய்யாத பட்சத்தில் டிசம்பர் 6 அன்று ஹரியானாவுக்கு எதிராகவும் விளையாட அவர் திட்டமிட்டுள்ளார்," என்றும் பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார்.
இதற்கிடையில், டிசம்பர் 9 அன்று தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அணிக்கு திரும்புவதற்கு முன்பு, ஷுப்மன் கில் தனது முழு உடல் தகுதி சோதனையை திங்களன்று பெங்களூரில் உள்ள சிறப்பு மையத்தில் மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் கில், இந்திய டி20 அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கில், டி20 அணிக்கு திரும்பினால், வழக்கம் போல் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காது என தெரிகிறது. ஆனால் சாம்சனை ஜித்தேஷ் சர்மாவுக்கு பதில் நடுவரிசையில் களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.