ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் காயம்.. ஆப்கானிஸ்தான் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்
மும்பை: இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் உடற்தகுதி பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதால், அவர் கிரிக்கெட் மைதானத்திற்குத் திரும்புவது மேலும் தாமதமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த புதிய காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தொடர் மூலம் ஹர்திக் பாண்டியா மீண்டும் விளையாடத் தயாராகி வந்தார். பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு முழு உடற்தகுதியைப் பெற்றிருந்தார். ஆனால், தற்போது அவரது காலில் ஏற்பட்டுள்ள லேசான தசைப்பிடிப்பு காரணமாக அவர் பந்துவீசுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

இதனால், செப்டம்பர் 13 முதல் தொடங்கவுள்ள ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் வெளியான தகவலின்படி, "ஹர்திக் பாண்டியா எவ்வித சிரமம் இன்றி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், காலில் ஏற்பட்ட லேசான அசௌகரியம் காரணமாக அவரைப் பந்துவீசுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர் விரைவில் பயிற்சியைத் தொடங்குவார் என்றாலும், ஆப்கானிஸ்தான் தொடருக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், அதற்குள் தேவையான உடற்தகுதியை எட்ட முடியாது. பேட்டிங் மற்றும் உடல் அசைவுகளில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், அவர் முழுமையாக குணமடைந்ததை கிரிக்கெட் அகாடமி உறுதி செய்த பிறகே விளையாட அனுமதிக்கப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மே 24 அன்று விளையாடியதே பாண்டியாவின் கடைசி போட்டியாகும். அதன் பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அவர், கால் தசைப்பிடிப்பு காரணமாக விலகினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. நடப்பாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு அவர் இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்திக் பாண்டியா மட்டுமின்றி ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் ரெட்டி போன்ற முக்கிய வீரர்களும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாடமியின் செயல்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு செப்டம்பர் 3 அன்று கூடவுள்ளது. இந்தத் தொடருக்கு, ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் அதே இளம் வீரர்களைக் கொண்ட அணி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ச்சியான உடற்தகுதிப் பிரச்சினைகள் காரணமாக, 2027 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாண்டியாவின் பங்கேற்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. 50 ஓவர் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு அவரது உடல் ஒத்துழைக்குமா என்றும், ஒரு போட்டியில் அவரால் 10 ஓவர்கள் முழுமையாக வீச முடியுமா என்றும் பிசிசிஐ கவலை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications

