மும்பை: வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஒரு "மிக முக்கியமான வீரராக" இருப்பார் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ், பாராட்டியுள்ளார். தனது யூடியூப் சேனலில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து அவர் பேசினார்.
இந்திய அணியின் பலத்தை விளக்கிய டி வில்லியர்ஸ், "பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் திறமையான பல வீரர்கள் இருப்பதால், அணியின் சமநிலையை சிறப்பாக அமைக்கலாம்," என்றார். ரிஷப் பண்ட், ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் துரதிர்ஷ்டவசமாக வாய்ப்பை இழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அபிஷேக் ஷர்மா தொடக்க வீரராகவும், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராகவும் இடம்பெற்றுள்ளனர்.

"ஹர்திக் ஒரு முக்கியமான வீரர். பேட் மற்றும் பந்து இரண்டிலும் போட்டிகளை வென்று தரும் திறமைசாலி. எந்த சூழ்நிலையிலும் பௌலிங் வீசக்கூடியவர்.பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் பேட்டிங் செய்யக்கூடியவர். அவர் பேட் செய்ய வரும்போது, 'இவரை அவுட் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் தோற்றுவிடுவோம்' என்ற உணர்வு எதிரணிக்கும் வரும்."
"அதேபோல் பந்துடன் வரும்போது, அவர் தங்கம் போன்ற பந்துவீச்சாளர், பார்ட்னர்ஷிப்பை முறித்துவிடுவார் என்று தோன்றும். சூர்யகுமார் (யாதவ்) போன்ற ஒரு கேப்டனுக்கு இவர் சிறந்த சொத்து," என்றார் டி வில்லியர்ஸ்.
ஹர்திக் பாண்டியா அண்மையில். விஜய் ஹசாரே டிராபியில் தனது முதல் 'லிஸ்ட் ஏ' சதத்தை அடித்து அதிரடி காட்டினார். விதர்பாவுக்கு எதிராக பரோடா அணிக்காக 92 பந்துகளில் 133 ரன்கள் குவித்தார், இதில் எட்டு பவுண்டரிகள், பதினொரு சிக்ஸர்கள் அடங்கும். ஒரு ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 34 ரன்கள் விளாசி அனைவரையும் வியக்க வைத்தார்.
சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20ஐ தொடரிலும் ஹர்திக் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்று இன்னிங்ஸ்களில் 71.00 சராசரியிலும், 186.84 அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டிலும் 142 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும்.