மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பண்டியா மற்றும் க்ருனால் பண்டியா கொரோனா வைரஸ் விழிப்புணர்வு விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்தி உள்ள அந்த வீடியோவில் பண்டியா சகோதரர்கள் வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் ஆடுகின்றனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனிதர்கள் மூலமாக மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 7 லட்சம் பேருக்கும் மேல் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஆயிரம் பேருக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் இந்த எண்ணிக்கை உயரலாம் என்ற அபாயம் உள்ளது. அதன் காரணமாக மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
அதையும் மீறி சிலர் வெளியே சுற்றி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளை வாங்கவும் வீதிகளில் மக்கள் வருகின்றனர். மக்கள் வெளியே வருவதை குறைக்க முடியாமல் திணறி வருகிறது காவல்துறை.
இந்த நிலையில் பிரபலங்கள் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு வற்புறுத்தி கேட்டுக் கொண்டு வருகின்றனர். ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா சகோதரர்களும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில் வீட்டில் கிரிக்கெட் ஆடி விட்டு இருவரும் தங்கள் கைகளை சுத்தம் செய்து கொள்கின்றனர். பின் இந்த லாக்டவுன் நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.