அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணி அகமதாபாத்தில் நடந்த 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் போது தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது தற்போது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் வலம் வந்து வெற்றியைக் கொண்டாடினர். அப்போது ஹர்திக் பாண்டியா தனது காதலியான மஹிகா சர்மாவுடன் இணைந்து வெற்றியைக் கொண்டாடினார். ஹர்திக் பாண்டியா தேசியக் கொடியை தனது உடலில் சுற்றியிருந்த நிலையில், அவர் தனது காதலியுடன் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசியக் கொடியை அணிந்திருக்கும் போது பொதுவெளியில் கண்ணியக் குறைவாக நடந்துகொண்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான் என்பவர் சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அந்தப் புகாரில், ஹர்திக் பாண்டியா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தேசியக் கொடியின் கண்ணியத்தைக் காப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை என்றும், ஹர்திக் பாண்டியாவின் இந்தச் செயல் சட்டப்படி குற்றமாகும் என்றும் வாஜித் கான் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் ஹர்திக் பாண்டியா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்ட அவர் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கில் இரண்டு அரைசதங்களையும் விளாசினார். ஐசிசி அறிவித்த இந்தத் தொடரின் சிறந்த அணியிலும் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார்.

கடந்த முறை உலகக் கோப்பையை வென்ற பிறகு, தான் விளையாடும் அனைத்துத் தொடர்களிலும் இந்திய அணிக்காக கோப்பையை வெல்ல வேண்டும் எனத் தனக்குத்தானே உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகவும், அந்த உறுதிமொழி தற்போது நிறைவேறியுள்ளதாகவும் பாண்டியா வெற்றிக்குப் பிறகு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.