மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. முதல் டி20 போட்டியில் இந்தியாவின் பேட்டிங் வரிசையில் தவறு செய்ததே தோல்விக்கு காரணம் என பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் இரண்டாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்து இருக்கிறது. முதல் டி20 போட்டியில் பேட்டிங் வரிசையில் ஆறு பேட்ஸ்மேன்கள் ஒரு ஆல் ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளர் ,ஒரு ஆல் ரவுண்டர் சுழற் பந்துவீச்சாளர் ஆகிய ஏழு பேட்டிங் தெரிந்த வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கியது.
இதன் மூலம் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தால் பின்வரிசை வீரர்கள் ரன்கள் சேர்க்க முடியாமல் தடுமாறுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு பேட்டிங்கை வலுப்படுத்த இந்திய அணி முடிவு எடுத்துள்ளது. அதன்படி இளம் அதிரடி வீரர் ஜெய்ஸ்வாலை அணிக்குள் மீண்டும் கொண்டு வர இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது .
அதன்படி தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் மற்றும் கில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இஷான் கிஷன் மூன்றாவது வீரராக டி20 கிரிக்கெட்டில் களமிறங்க கூடும். நடு வரிசையில் சூரியகுமார் யாதவ் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா ஆகியோர் இருப்பார்கள். எட்டாவது வீரராக அக்சர் பட்டேல் விளையாடக்கூடும்.
இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பதில் சாகல் அல்லது குல்தீப் என ஒரு வீரரை மட்டுமே அணியில் சேர்க்க ஹர்திக் பாண்டியா முடிவெடுத்துள்ளார். இதேபோன்று வேக பந்து வீச்சிலும் அர்ஷிதீப் சிங் மற்றும் ஆவேஸ் கானை அணிக்குள் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியாவின் பேட்டிங் மேலும் வலுபெறும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் முதல் டி20 போட்டியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டும் அக்சர் பட்டேல் வெறும் இரண்டு ஓவர்களை மட்டுமே வீசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.