பிரிஸ்டல்:இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டித் தொடரில் இந்தியா வென்றதற்கு முக்கியமான காரணத்தை போட்டு உடைத்துள்ளார் இரண்டாவது கபில்தேவான ஹார்திக் பாண்டயா.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என வென்றது. முதல் டி-20ல் இந்தியா வென்றது. இரண்டாவதை இங்கிலாந்து வென்று சமநிலையை உருவாக்கியது.
இந்த நிலையில் பிரிஸ்டலில் நேற்று நடந்த மூன்றாவது டி-20 போட்டியில் வென்று தொடரை இந்தியா கைப்பற்றியது. தொடர்ந்து 6வது முறையாக டி-20 போட்டித் தொடரில் இந்தியா வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் தனது முதல் ஓவரில் 22 ரன்களை கொடுத்த ஹார்திக் பாண்டயா, அதன்பிறகு அபாரமாக பந்து வீசி 38 ரன்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் 33 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த வெற்றி குறித்து, நிருபர்களிடம் பாண்டயா கூறியதாவது:
முதல் ஓவரில் 22 ரன்கள் கொடுத்தபோது, நொந்து போய்விட்டேன். இதுதான் டி-20 போட்டியின் சிறப்பு என்பதை உணர்ந்தேன். ஆனால், அதற்கடுத்த ஓவரையும் வீச கேப்டன் கோஹ்லி அழைத்தார்.
விக்கெட்டை வீழ்த்தினால், ரன் குவிப்பை குறைக்கலாம் என்று கூறினார். இதுபோல் மிகச் சிறந்த தலைமை குணம் கொண்ட சீனியர்கள் அணியில் உள்ளது நமக்கு மிகப் பெரிய பலம். இதுபோன்ற சீனியர்கள் சரியான நேரத்தில் சரியான ஆலோசனையை கூறுவதுடன், இக்கட்டான நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்கு தங்களுடைய நடவடிக்கைகளால் உணர்த்தி வருகின்றனர். இதுவே இந்திய அணியின் வெற்றிக்கு காரணம்.
இவ்வாறு அவர் பாண்டயா கூறினார். அதிரடியாக விளையாடினால் மட்டும் போதாது, போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி விளையாட வேண்டும், கூலாக எப்படி விளையாட வேண்டும் என்பதை கேப்டன் கோஹ்லிக்கு கேப்டன் கூல் தோனி இப்போதும் கற்றுத் தந்து வருகிறார்.
இதுபோன்ற சீனியர்கள் கற்றுத் தருவதும், அதை ஜூனியர்கள் கற்றுக் கொள்வதும்தான் இந்திய அணியின் வெற்றி மந்திரமாகும்.