
ஸ்பின்னர்தான் ஆல்-ரவுண்டரா
ஹர்திக் பாண்ட்யாவை அணியில் சேர்ப்பதற்கான காரணம் அவரது ஆல்-ரவுண்டர் திறமைதான். பொதுவாக இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் என்றாலே, ஸ்பின் பந்து போடும் பேட்ஸ்மேன் என்ற நிலைதான் நீண்டகாலமாக உள்ளது.

ஜொலித்த கபில், ராபின்
கபில்தேவ், ராபின்சிங், இர்பான் பதான், போன்ற ஒரு சிலரே வேகப்பந்து வீச்சாளர்களாகவும், பேட்ஸ்மேன்களாகவும் ஜொலித்துள்ளனர். அந்த வரிசையில் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம்தான் இந்த பாண்ட்யா.

பிற அணி வீரர்கள்
வேகப்பந்து வீச்சுடன், பேட்டிங்கிலும் ஜொலிக்கும் வீரர்கள் பிற அணிகளில் அதிகம். தென் ஆப்பிரிக்காவின் க்ளூசினர், ஜாக் கல்லீஸ், இங்கிலாந்தின் ஆன்ட்ரூ பிளின்டாப், பாகிஸ்தானின் அப்துல் ரசாக், வாசிம் அக்ரம், ஆஸ்திரேலியாவின் பால்க்னர், வெஸ்ட் இண்டீசின் பிராவோ போன்றோர் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள்.

சிக்கினார் பாண்ட்யா
இதுபோன்ற வேகப்பந்து ஆல்-ரவுண்டரை வெகுகாலமாக இந்தியா தேடிக்கொண்டிருந்த நிலையில் கிடைத்துள்ளார் பாண்ட்யா. இவர் மணிக்கு சுமார் 135 கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடிய திறமையுடன் கூடியவர் என்பதை ஆஸி. சுற்றுப் பயணத்திலேயே ரசிகர்கள் பார்த்தனர்.

பலே பாண்ட்யா
பாண்ட்யா ஒரு அதிரடி வீரர் என்பதை நேற்றைய போட்டியில் ரசிகர்கள் பார்க்க முடிந்தது. யுவராஜ்சிங்கிற்கு பதிலாக பாண்ட்யாவை முன்கூட்டியே களமிறக்கிய டோணியின் சமயோஜித புத்தியால், பாண்ட்யாவின் ஆட்டத்தை ரசிகர்களால் ரசிக்க முடிந்தது.

குறைந்த ரன் ரேட்
7 ஓவர்களில் 75 ரன்கள் குவித்து முதல் விக்கெட்டாக தவானை இழந்திருந்தது இந்தியா. ஆனால் 14 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்திருந்தது. அப்போதைய கட்டத்தில் ரன் ரேட் குறையத்தொடங்கியிருந்தது.

மே.இ.தீவுகள் வீரரை போல
இந்நிலையில்தான் பாண்ட்யாவை களமிறக்கினார் டோணி. சும்மா சொல்லக்கூடாது, வெஸ்ட் இண்டீசின் கெயிலை போல பதற்றமே படாமல் பந்துகளை சிதறடித்தார் பாண்ட்யா. அதிலும் நன்கு பிட்ச் செய்து சுழன்று வந்த ஸ்பின் பந்து ஒன்றை, மிக இலகுவாக அவர் சிக்சர் தூக்கிய விதம் கிரிக்கெட் வல்லுநர்களை ஆச்சரியப்பட செய்தது.

நம்பிக்கையை காத்தார்
தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் 2 சிக்சர்கள் விளாசியதோடு, அதிரடியாக 12 பந்துகளில் 27 ரன்களை குவித்து ஆவுட் ஆனார் பாண்ட்யா. குறைந்திருந்த ரன் ரேட் விறுவிறுவென ஏறுவதற்கு அந்த ஆட்டம் உதவிற்று. யுவராஜைவிட பாண்ட்யா அதிரடியாக ஆடுவார் என நம்பிய டோணியின் நம்பிக்கையை காப்பாற்றினார் பாண்ட்யா.

பாண்ட்யாவுக்கு இடம் பார்சல்
பதற்றமின்றி அதிரடி காண்பித்த பாண்ட்யா, உலக கோப்பை டி20 தொடருக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியில் யுவராஜை வீழ்த்தி இடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications











