கொழும்பு : இந்திய அணியில் மற்ற வீரர்களைக் காட்டிலும் ஆல்-ரவுண்டராக தனக்குத் தான் அதிக வேலைப் பளு என கூறி இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முழுமையான ஆல் - ரவுண்டர் யார் என்றால் அது ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா மட்டும்தான்.

அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்குர் போன்ற வீரர்கள் பகுதி நேரமாக மட்டுமே அணியில் இடம் பெற்று வருகிறார்கள். அந்த வகையில், அணிக்காக முழு நேரமும் ஒரு ஆல் ரவுண்டராக தான் இருப்பது குறித்து பேசி இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
கடந்த காலங்களில் கடுமையான முதுகு வலி காரணமாக பாண்டியா நீண்ட காலம் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்து வந்தார். அதன் பின் அவர் தன் பயிற்சி மற்றும் ஆட்டத்தை தன உடல்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி இருக்கிறார்.
இதுபற்றி கூறுகையில், "ஒரு ஆல் - ரவுண்டராக எனது வேலைப் பளு மற்ற அனைவரையும் விட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு அதிகம். அணியில் இடம் பெற்று இருக்கும் ஒரு பேட்ஸ்மேன் பேட்டிங் ஆடி முடித்த பின் தன் வீட்டுக்கு போய்விடலாம். ஆனால், நான் அதன் பின்னும் பந்து வீச வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் எனது வலைப் பயிற்சி மற்றும் ஒரு தொடருக்கு முன்பான நீண்ட பயிற்சி ஆகியவற்றின் போது அனைத்தையும் சரியாக நிர்வகிக்க வேண்டும்" என்றார்.
டி2௦ அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தான் எந்த அளவுக்கு கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் அவர் கூறி இருக்கிறார்.
சமீபத்தில் உலககோப்பை தொடருக்கான அணியில் இந்திய அணியின் துருப்புச்சீட்டு ஹர்திக் பாண்டியா தான் என கேப்டன் ரோஹித் சர்மா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.