தனியொருவரின் போராட்டம்
இந்தியாவின் வெற்றிக்காக வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை தனியாளாக போராடினார். 89 ரன்களுக்கு 5 விக்கெட்கள் என்ற இக்கட்டான சூழலில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்களை அடித்தார். எனினும் மறுமுனையில் சரியான ஆதரவு கிடைக்காததால் போராட்டம் வீண் ஆனது.
காரணம் என்ன
இந்த தோல்விக்கு முக்கிய காரணம் அர்ஷ்தீப் சிங்கின் கடைசி ஓவர் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. 19 ஓவர்களில் 149 ரன்களை மட்டுமே நியூசிலாந்து அடித்திருந்த போது வந்த அர்ஷ்தீப் சிங், கடைசி ஓவரில் நோ பாலை வீசி சொதப்பினார். இதனால் அந்த ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் சேர்த்து 27 ரன்களை வாரி வழங்கினார்.
கேப்டன்சி தவறுகள்
இந்நிலையில் பாண்ட்யா செய்த தவறு தான் தோல்விக்கு அடித்தளம் என்றால் நம்ப முடிகிறதா? அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி என 3 முழு நேர பவுலர்கள் இருக்கும் நேரத்தில் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா முதல் ஓவரை வீச செல்கிறார். கடந்த சில போட்டிகளாக அவர் முதல் ஓவரை வீச பழகி வருகிறார் என்பதே இதற்கு காரணம். முதல் ஓவரில் பாண்ட்யா 12 ரன்களை விட்டுக்கொடுத்த போதும் தொடர்ச்சியாக பந்துவீசினார். ஆனால் உம்ரான் ஒரு ஓவரில் 16 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பதற்காக ஓவர்களே அதன்பின் கொடுக்கப்படவில்லை.
பேட்டிங் ஆர்டர் மாற்றம்
தீபக் ஹூடா பொதுவாக ஓப்பனிங் இடம் அல்லது டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய வீரர் ஆகும். 3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழந்திருந்த போது ஹூடாவை களமிறக்கியிருந்தால் அவர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் லோயர் ஆர்டரில் ஆடும் பாண்ட்யா, ஹூடாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 3வது விக்கெட்டிற்கு களமிறங்கினார். வாஷிங்டனுக்கு பிறகு 7வது வீரராக தான் அவர் களமிறங்கினார். இதனால் அழுத்தத்தில் எப்படி ஆடுவது என புரியாமல் மோசமாக விக்கெட்டை பறிகொடுத்தார்.
பாதிக்கப்படும் வீரர்கள்
இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு துறைகளிலும் தனக்கு முதன்மை வாய்ப்பு வேண்டும் என நினைப்பதால், மற்ற வீரர்களின் வழக்கமான இடங்கள் மாறிவிடுகின்றன. இதனால் அவர்களின் நம்பிக்கையும் குறைந்து தடுமாறிவிடுகின்றனர். எனவே கேப்டன்சியை பாண்ட்யா தவறாக பயன்படுத்திக்கொள்ளாமல் தனக்கான இடத்தில் விளையாட வேண்டும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். எனினும் ஒரு கேப்டனாக பொறுப்பை ஏற்று ஆட வேண்டும் என்றே இப்படி செய்தார் என மற்றொருபுறம் ரசிகர்கள் ஆதரவுக்கூறி வருகின்றனர்.