சஞ்சு ஏமாற்றம்
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போதும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு மட்டும் சரியாக போகவில்லை. பேட்டிங்கில் 4வது வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே எடுத்து மோசமான ஷாட்டால் விக்கெட்டை பறிகொடுத்தார். 2 பந்துகளுக்கு முன்பே அவுட்டாவதில் இருந்து தப்பித்த போதும் உஷாராகி கொள்ளாமல் மீண்டும் தவறான ஷாட்டால் ஆட்டமிழந்தார்.
ஃபீல்டிங்கும் சொதப்பல்
இதே போல ஃபீல்டிங்கிலும் பெரிய தவறை செய்தார். ஹர்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரில் இலங்கையின் ஓப்பனிங் வீரர் பதும் நிஷங்கா பேட்டில் எட்ஜானது. அப்போது மிட் ஆஃப் திசையில் நின்றிருந்த சஞ்சு சாம்சன், நான்கு அடி எடுத்து வைத்திருந்தால் பிடித்திருக்கலாம். ஆனால் டைவ் அடித்து கேட்ச்-ஐ தவறவிட்டார். கையில் பந்தும் பிடிபட்டுவிட்டது. எனினும் கீழே விழும் நேரத்தில் தவறவிட்டார்.
பாண்ட்யாவின் பதில்
இந்நிலையில் இதற்கு ஹர்திக் கொடுத்த பதில் தான் சுவாரஸ்யமே. எந்தவொரு பவுலரும் தங்களது கேட்ச் தவறினால் கோபப்படுவார்கள். அதுவே கேப்டனாக இருந்தால் ஆத்திரத்தில் கத்தலாம். ஆனால் ஹர்திக் பாண்ட்யா எதையும் செய்யாமல் சஞ்சுவை பார்த்து சிரித்துக்கொண்டே சென்றார். ஒரு வீரர் தவறு செய்கையில், சிரித்துக்கொண்டே சாதாரணமாக விட்டால் தான், அழுத்தம் அவர் மீது இருக்காது என்பதை தோனியை போன்றே கையாண்டார் ஹர்திக் பாண்ட்யா.
அக்ஷருக்கு அட்வைஸ்
இதே போல தான் அக்ஷரின் பவுலிங். கடைசி ஓவரை அக்ஷர் வீசும் போது சிக்ஸர் சென்றது. இதனால் ஆட்டம் இந்தியாவின் கையைவிட்டு சென்றுவிடுமோ என ரசிகர்கள் பதறினர். அப்போது அவரிடம் சென்ற ஹர்திக் பாண்ட்யா, பேட்ஸ்மேனின் வீக்னஸ் குறித்து நிதானமாக எடுத்துக்கூறி, அதனை அப்படியே செய்யச்சொன்னார். இது நல்ல பலனை கொடுத்தது. குறிப்பாக இதுதான் வெற்றிக்கு திருப்புமுனையாக இருந்தது.