சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் தோல்விக்கு ஹர்திக் பாண்டியா அளித்துள்ள பதிலால் கோபமடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தோனியின் வார்த்தைகளை வைத்து தரமான அட்வைஸ் ஒன்றை அளித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆனால் பின்னர் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. வாழ்வா சாவா போட்டியில் அடுத்தடுத்து வென்ற இந்தியா, கடைசி போட்டியில் மோசமான தோல்வியை அடைந்தது. இதனால் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தொடரை இழந்துள்ளது.

இந்த டி20 தொடர் தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா பேசுகையில், நாங்கள் இளம் அணியாக இருக்கிறோம். அதனால் இங்கும், அங்குமாக ஒன்றிரண்டு டி20 தொடர்களில் தோல்வியடைவது பெரிதல்ல. எங்களுக்கு இலக்கு தான் முக்கியம். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் இதுபோன்ற தோல்விகள் சாதாரணம். இந்த தோல்வி எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது என்று தெரிவித்தார். ஹர்திக் பாண்டியாவின் இந்த பதில், ரவிச்சந்திரன் அஸ்வினை கோபப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது யூட்யூப் சேனலில் பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் எக்கச்சக்கமான நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோர் டாப் ஆர்டரில் அசத்தியுள்ளார்கள். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் நல்ல ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்கள். குல்தீப் யாதவ் மீண்டும் நல்ல ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.
என்னை பொறுத்தவரை இந்திய அணியின் பேட்டிங் வரிசை நீட்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் டெய்லெண்டர்களில் சிலரும் பேட்டிங் செய்ய வேண்டும். அதேபோல் ஹர்திக் பாண்டியா ஒன்றிரண்டு தோல்விகள் பற்றி கவலையில்லை என்று கூறி இருக்கிறார். அவருக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.
இதனை எனது பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன் தோனி உள்ளிட்டோர் சொல்லி இருக்கிறார்கள். அது என்னவென்றால், நாம் தோல்வியில் இருந்து ஏராளமானவற்றை கற்றுக் கொள்வோம். ஆனால் யார் வெற்றியின் போது கற்றுக் கொள்கிறார்களோ, அவர்களே சாம்பியன்களாக உருவாகுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அதனால் வெற்றி, தோல்வி எது வந்தாலும் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஹர்திக் பாண்டியாவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.