கயானா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா என்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 160 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்தப் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஒரு அணியாக இந்த மூன்று போட்டிகள் நிச்சயம் தில்லாக இருக்கும் என நாங்கள் கருதினோம். இது போன்ற நெருக்கடியான ஆட்டத்தில் நாங்கள் யார் என்பதை காட்ட வேண்டும்.

அதனால் இந்த ஆட்டத்தை நாங்கள் எதிர்நோக்கி இருந்தோம். நிக்கோலஸ் பூரான் தன்னுடைய இயல்பான பேட்டிங் வரிசையில் களமிறங்கவில்லை. இதன் மூலம் அவர் வருவதற்குள் சுழற் பந்துவீச்சாளர்களை விரைவாக பயன்படுத்த வேண்டும் என எண்ணினேன். இதன் மூலம் அக்சர் பட்டேல் தன்னுடைய நான்கு ஓவர்களையும் வீச முடிந்தது. நிக்கோலஸ் பூரான் அடிக்க வேண்டும் என நினைத்தால் அவர் என்னை அடிக்கட்டும்.
அதுதான் என்னுடைய திட்டமே. இது போன்ற பந்தயத்தை நான் மகிழ்ச்சி உடன் எதிர்கொள்வேன். என்னுடைய இந்த பேட்டியை அவர் நிச்சயமாக கேட்பார் என நினைக்கிறேன். நான்காவது டி20 போட்டியில் என்னுடைய பந்துவீச்சை பூரான் வெளுக்க தயாராக இருப்பார்.இந்த டி20 தொடரில் ஏழு பேட்ஸ்மேன்கள் போதும் என்ற முடிவுடன் தான் நாங்கள் களமிறங்கினோம். இதன் மூலம் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தோம்.
இன்றைய ஆட்டத்தில் நடந்தது போல் ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினாலே பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என்ற நிலை இருக்காது. சூரியகுமார் யாதவும் திலக் வர்மாவும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடுகிறார்கள்.அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து விளையாடக்கூடியவர்கள்.
சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது நிச்சயம் நல்லது தான். ஏனென்றால் அவர்கள் பொறுப்பை எடுத்துக்கொண்டு விளையாடுவார்கள். இதன் மூலம் மற்ற வீரர்களுக்கு அவர்கள் எடுத்துக்காட்டாக இருப்பார்கள் என ஹர்திக் பாண்டியா கூறினார்.