அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் 131 ரன்கள் என்ற இலக்கை துரத்த முடியாமல் டெல்லி அணியிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் அணி தோல்வியை தழுவியது.
தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த எளிய இலக்கை எந்த நாளாக இருந்தாலும் நாங்கள் வெற்றிகரமாக துரத்தி இருப்போம். எனினும் முக்கியமான கட்டத்தில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டார்கள்.

ராகுல் திவாட்டியா அதிரடியாக விளையாடி எங்களை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வந்தார். இதனை பயன்படுத்திக் கொண்டு அணிக்கு வெற்றி பெற வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. இந்தத் தோல்விக்கு முக்கிய காரணம் நான் தான். நான் இந்த ஆட்டத்தில் கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்திருக்க வேண்டும்.
இந்த தோல்விக்கு முழு பொறுப்பை நான் ஏற்கிறேன். நாங்கள் தொடக்கத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை. அபினவ் இளம் வீரர், அவரைக் குறை சொல்ல முடியாது. நடு ஓவர்களில் கொஞ்சம் அதிரடியாக விளையாடிருக்க வேண்டும். இதற்காக டெல்லி அணியை நான் பாராட்டுகிறேன். அவர்கள் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.

ஆடுகளத்தை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் இங்கு தான் பயிற்சி செய்திருக்கிறோம். நான் முகமது சமிக்காக நிச்சயம் வருந்துகிறேன். இவ்வளவு சிறப்பாக செயல்பட்டு எதிரணியை 130 ரன்கள் சுருட்டியும் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை அளித்து விட்டார்கள். கண்டிப்பாக ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லை.அது முகமது சமியின் திறமையால் தான் எதிர் அணி வீரர்கள் பேட்டிங் செய்ய முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
எங்கள் அணி பந்துவீச்சாளர்களுக்கு முழு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். ஆனால் பேட்ஸ்மேன்கள் அவர்களுக்கு துணையாக நிற்கவில்லை. இன்னும் நிறைய போட்டிகள் எங்களுக்கு எஞ்சி இருக்கிறது. இதில் கற்ற பாடத்தை நாங்கள் அதில் நடைமுறைப்படுத்தி வெற்றி பெறுவோம். நாங்கள் இன்னும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தான் இருக்கிறோம். இருந்தாலும் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டிய சூழலில் உள்ளோம் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.