பெங்களூரு: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் இதுவரை யுவராஜ் சிங் மட்டுமே மூன்று முறை செய்த அபூர்வமான மற்றும் ஆச்சரியமான சாதனையை, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹார்திக் பாண்டயா செய்துள்ளார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று நடந்த சீசனின் 31வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலி்ல ஆடிய பெங்களூர் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 14 ரன்களில் பெங்களூர் வென்றது.
இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹார்திக் பாண்டயா 3 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 50 ரன்களும் அடித்தார். இரண்டாவது கபில்தேவ் என்று கூறப்படும் ஹார்திக் பாண்டயா சிறந்த ஆல்-ரவுண்டராக உருவாகி வருகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் தோல்வியடைந்த அணிக்காக, ஒரு ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தியதுடன், 50 ரன்கள் அடித்த சாதனையை யுவராஜ் சிங் இதுவரை மூன்று முறை செய்துள்ளார். அந்த சாதனைப் பட்டியலில் ஹார்திக் பாண்டயா சேர்ந்துள்ளார்.
யுவராஜ் சிங் பஞ்சாப் அணிக்காக, 2009ல் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் மற்றும் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டை வீழ்த்தினார். 2011ல் புனே அணிக்காக டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் அடித்ததுடன், 29 ரன்களுக்கு 4 விக்கெட்டை வீழ்த்தினார். பெங்களூர் அணிக்காக யுவராஜ் சிங் 2014ல் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 83 ரன்கள் அடித்ததுடன், 35 ரன்களுக்கு 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆனால் இந்த ஆட்டங்களில் எல்லாம் அவர் விளையாடிய அணி தோல்வியடைந்தது. தற்போது அதுபோலவே தோல்வி அடைந்த அணிக்காக விளையாடி 50 ரன்கள் மற்றும் 3 விக்கெட் வீழ்த்திய வினோதமான சாதனையை பாண்டயா புரிந்துள்ளார்.
அடுத்து நடக்கும் ஆட்டத்தில் ஹார்திக் பாண்டயாவின் மும்பை அணியும், யுவராஜ் சிங் விளையாடும் பஞ்சாப் அணியும் மோத உளளன.