
பிசிசிஐ வைத்த நம்பிக்கை
சரியான உடற்தகுதி இல்லாதபோதும், வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட ஆல்ரவுண்டர் வந்த போதும் ஹர்திக் பாண்ட்யா மீது பெரும் நம்பிக்கையை வைத்துள்ளது பிசிசிஐ. அதாவது வரும் டி20 உலகக்கோப்பை அணியின் ப்ளேயிங் 11ல் அவரை இணைப்பதற்காக முயற்சி செய்து வருகிறது. மேலும் மற்ற வீரர்கள் தேர்வையும் தற்போதே தொடங்கிவிட்டது.

வீரர்களுக்கு அழைப்பு
அதன்படி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்களில் இருந்து 25 பேரை தேர்வு செய்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்தது. அங்கு அவர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு, உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் ஹர்திக்கும் ஒருவர். ஆனால் அவர் அதனை மதிக்கக்கூட இல்லை.

மதிக்காமல் இருந்த பாண்ட்யா
பிசிசிஐ-ன் அழைப்பையும் ஏற்காமல், எந்தவொரு பதிலையும் சரியாக அளிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு அதிகாரிகள் அதிருப்தியில் ஆழ்ந்தனர். அதன்படி சமீபத்தில் பாண்ட்யாவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர் பெங்களூருக்கு செல்லவில்லை என்றால், இனி இந்திய அணியில் பரிந்துரைக்கக்கூட மாட்டார் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

பாண்ட்யா தந்த ட்விஸ்ட்
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா அவசர அவசரமாக பெங்களூருக்கு சென்றுள்ளார். அங்கு கே.எல்.ராகுல், ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட மற்ற வீரர்களுடன் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அநேகமாக தென்னாப்பிரிக்க தொடரில் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications