மும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் இன்ஸ்டாகிராம் பதிவு சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், தற்போது தம்பதியினர் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியா உடனான புகைப்படங்களை நடாஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

அதேபோல் ஐபிஎல் போட்டிகளின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக நடாஷா மைதானத்திற்கு வரவில்லை. இதுமட்டுமல்லாமல் நடாஷாவின் பிறந்தநாளன்று கூட ஹர்திக் பாண்டியா எந்த வாழ்த்தையும் சோசியல் மீடியாவில் பகிரவில்லை. இதனால் தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அவருடன் நடாஷா செல்லாத நிலையில், மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார். சமீப நாட்களாக நடாஷா தனது உடல் மீது அதிக அக்கறை செலுத்தி வருவதோடு, ஜிம்மில் வொர்க் அவுட் செய்து வருகிறார்.
அண்மையில் கூட நடிகை திஷா படானியின் முன்னாள் காதலரும், உடல்பயிற்சி நிபுரணருமான அலெக்சாண்டர் உடன் ரெஸ்டாரண்டில் காணப்பட்டார். இந்த நிலையில் நடாஷா ஸ்டான்கோவிக்கின் சோசியல் மீடியா பதிவு ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. இரு புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடாஷா, ஒன்றில் லிஃப்டில் இருந்தவாறு செல்ஃபியையும், மற்றொரு புகைப்படத்தில் ஜிம்மில் தனது செல்ல நாயுடனும் காணப்படுகிறார்.

அதேபோல் இயேசு கிறிஸ்து ஒரு குழந்தையுடன் தனித்து நடந்து செல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதனால் தனது மகன் மீதான அன்பை நடாஷா வெளிப்படுத்தும் வகையில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தனியாக வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து செய்தியே ஒரு விளம்பர யுக்தி என்பது பொய் என்று தெரிய வந்துள்ளது.