மும்பை: கடந்த மாதம் இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு இருந்தார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் கேப்டனாக செயல்பட்டார். முன்னதாக ஹர்திக் பாண்டியா தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அப்போது தேர்வுக் தலைவர் அஜித் அகர்கர், ஹர்திக் பாண்டியாவுக்கு அடிக்கடி காயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால், நிலையான ஒரு வீரர் கேப்டன் ஆக வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமித்தோம் என கூறி இருந்தார். ஆனால், தற்போது முன்னணி கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே விரைவில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக குண்டைத் தூக்கி வீசி இருக்கிறார்.

இது பற்றி ஹர்ஷா போக்ளே பேசுகையில், "ஹர்திக் பாண்டியாவை உள்ளூர் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுமாறு கூறி இருக்கிறார்கள். அவருக்கு கேப்டனாகும் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிடவில்லை. அவருக்கான கதவு திறந்தே இருக்கிறது. இப்போதைக்கு சூர்யகுமார் யாதவை பரிசோதனை முயற்சியாக கேப்டனாக நியமித்து இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா உடற் தகுதியோடு இருந்து, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் அவர் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவார்" என கூறி இருக்கிறார்.
ஹர்ஷா போக்ளே இந்திய கிரிக்கெட் அணியின் உள்விவகாரங்களை அறிந்தவர் என்ற வகையில், அவரது கருத்து இந்திய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யகுமார் யாதவ் தற்காலிக கேப்டன் என்றால் அவர் அலைக்கழிக்கப்படுகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முன்னதாக 2026 டி20 உலகக் கோப்பை வரை சூர்யகுமார் யாதவ் தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருப்பார் என கூறப்பட்டது. கேப்டன்களை அடிக்கடி மாற்றுவதை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விரும்ப மாட்டார் எனவும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அத்திக் பாண்டியா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கேப்டன்களை அடிக்கடி மாற்றுவது வீரர்களையும் சோர்வடையச் செய்யும். பிசிசிஐ என்ன முடிவை எடுக்கப் போகிறது?