லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்தத் தொடரில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரால், இங்கிலாந்து தரப்பிலிருந்து தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹாரி ப்ரூக்.
ஆனால், அந்த விருதை ஏற்க மறுத்த ஹாரி ப்ரூக், "இந்த விருதுக்கு என்னைவிட ஜோ ரூட் தான் தகுதியானவர்" என்று கூறி இருக்கிறார். ஹாரி ப்ரூக்கின் இந்த பெருந்தன்மையான செயல், ரசிகர்களிடையே பரவி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரு சுவாரஸ்யமான வழக்கம் பின்பற்றப்பட்டது. அதாவது, எதிரணியின் தொடர் நாயகனை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் தான் தேர்ந்தெடுப்பார். அதன்படி, இந்திய அணியின் தொடர் நாயகனாக சுப்மன் கில்லை இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தேர்ந்தெடுத்தார். அதேபோல, இங்கிலாந்து அணியின் தொடர் நாயகனாக ஹாரி ப்ரூக்கை இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தேர்ந்தெடுத்தார்.
ஆனால், போட்டிக்குப் பிந்தைய பேட்டியில், ஹாரி ப்ரூக் இந்த விருதை ஏற்க மறுத்து பேசி இருக்கிறார். "நான் ரூட்டை (ஜோ ரூட்) விட அதிக ரன்கள் குவிக்கவில்லை. அதனால், இந்தத் தொடரின் நாயகனாகவோ அல்லது இந்த சீசனின் நாயகனாகவோ அவர்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பல வருடங்களாக அவர்தான் அப்படி இருந்து வருகிறார்," என்று கூறினார் ஹாரி ப்ரூக்.
ஹாரி ப்ரூக் இந்தத் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி, 53.44 என்ற சராசரியுடன் 481 ரன்கள் குவித்தார். இதில் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்டில் அடித்த அதிரடி சதம் (111) அடங்கும். ஆனால், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட், இந்தத் தொடரில் ஐந்து போட்டிகளில் 67 என்ற சிறந்த சராசரியுடன் 537 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ரன் குவித்த வீரராகத் திகழ்ந்தார்.
தனது சக வீரர் தன்னை விட சிறப்பாகச் செயல்பட்டதாகக் கருதிய ஹாரி ப்ரூக், அந்த விருதுக்கு அவர் தான் தகுதியானவர் என்று வெளிப்படையாகக் கூறியது, அவரது பெருந்தன்மையை காட்டுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில், இங்கிலாந்து அணிக்கு இந்தியா நிர்ணயித்த கடினமான இலக்கை நோக்கி ஹாரி ப்ரூக்கும், ஜோ ரூட்டும் அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று தோன்றியது. ஆனால், அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ஹாரி ப்ரூக், ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது, இங்கிலாந்து அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
அந்த ஆட்டமிழப்பு குறித்து ப்ரூக், "முடிந்தவரை வேகமாக ரன்களைக் குவிக்கவே நான் முயற்சித்தேன். நான் ஆட்டமிழந்த விதம் ஏமாற்றம் அளித்தாலும், அணியின் வெற்றிக்குப் பங்களிப்பதில் எப்போதும் மகிழ்ச்சி," என்றார்.