ஐதராபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர் ஹாரிஸ் ராஃப் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை பாகிஸ்தான் அணி பக்கம் திருப்பியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் 2வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் 68 ரன்கள் சேர்த்து அசத்தினர். நெதர்லாந்து அணி தரப்பில் பேஸ் டி லீட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 287 ரன்களுடன் நெதர்லாந்து அணி தரப்பில் விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. அதில் மேக்ஸ் 5 ரன்களிலும், தொடர்ந்து வந்த அக்கர்மேன் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் விக்ரம்ஜித் சிங் - பேஸ் டி லீட் கூட்டணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விரைவாக ரன்கள் சேர்த்தது. 21 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்கள் சேர்த்திருந்தது.
அப்போது பிட்சில் எந்த உதவியும் இல்லை என்பதை புரிந்துகொண்ட பாபர் அசாம், உடனடியாக ஷதாப் கானை அட்டாக்கில் கொண்டு வந்தார். அப்போது ஷதாப் கான் 52 ரன்களில் ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 120 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடியது. இதையடுத்து ஹாரிஸ் ராஃபை வைத்து பவுன்சர் பந்துகளை வீசும் முயற்சியில் பாகிஸ்தான் அணி ஈடுபட்டது. 26வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட, 2வது பந்திலேயே நிடாமண்ணுரு 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் அந்த ஓவரின் 4வது பந்தில் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாரிஸ் ராஃப் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி பக்கம் திருப்பினார். தொடர்ந்து 5வது பந்தில் நெதர்லாந்து அணியின் ஜுல்ஃபிகர் பேட்டில் பந்து அடித்து ஸ்லிப் திசையில் நின்றிருந்த இஃப்திகார் கைகளில் சென்று விழுந்தது. ஆனால் அந்த கேட்சை இஃப்திகார் கோட்டைவிட்டார். இதனால் பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் வெற்றிக்காக முயன்றும், ஃபீல்டர்கள் ஒத்துழைப்பதில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.