முதல் போட்டியில் இந்தியா
உலக டி20 தொடரில் தன் முதல் கோப்பையை வெல்லும் கனவில் இருக்கும் இந்திய அணி தன் முதல் குரூப் போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் தானியா பாட்டியா மற்றும் ஸ்மிருதி மந்தனா சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இதையடுத்து ஜெமிமா மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பொறுப்பாக ஆடினர்.
ஹர்மன்ப்ரீத் 49 பந்துகளில் சதம்
ஜெமிமா 45 பந்துகளில் 59 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் 49 பந்துகளில் சதம் அடித்து டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை புரிந்தார். இந்தியா 194 ரன்கள் குவித்தது. உலக டி20 வரலாற்றில் இதுவே ஒரு இன்னிங்க்ஸ்-இல் எடுக்கப்பட்ட அதிகமான ரன்கள் ஆகும்.
நியூசிலாந்து தோல்வி அடைந்தது
நியூசிலாந்து அணியில் ஆடிய சூசி பேட்ஸ் தனியாளாக போராடி 50 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். அடுத்து மார்டின் மட்டுமே ஓரளவு கை கொடுத்து 39 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அந்த அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஹேமலதா மற்றும் பூனம் யாதவ் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். ஹேமலதா சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்மன்ப்ரீத் அதிரடிக்கு காரணம்
ஹர்மன்ப்ரீத் கௌர் அடித்த சதத்தில் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவர் அதிரடியாக ஆடியதற்கு காரணம் ஆட்டத்தின் துவக்கத்தில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு தான். தசைப் பிடிப்பால் ஒற்றை ரன்கள் ஓடுவதில் சிரமம் இருந்ததால், அதிரடியாக பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்துள்ளார் ஹர்மன்ப்ரீத்.