மும்பை: 2025 ஐசிசி மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்து முதல் உலகக்கோப்பையை வென்றது. இந்த வெற்றி குறித்தும், போட்டியின் வெற்றியை உறுதி செய்த தனது கேட்ச் குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பிசிசிஐ நமன் விருதுகள் விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
"பல ஆண்டு கால காத்திருப்புக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி, இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் ஷஃபாலி வர்மாவின் அதிரடியான 87 ரன்கள் மற்றும் தீப்தி ஷர்மாவின் அபார பந்துவீச்சு இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. உலகக்கோப்பையை வென்றது ஒட்டுமொத்த அணியின் நீண்ட நாள் கனவு மெய்ப்பட்ட தருணம்" என ஹர்மன்ப்ரீத் கவுர் பெருமிதத்துடன் கூறினார்.

நவி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்த அந்த இறுதிப்போட்டியில், தீப்தி ஷர்மா வீசிய பந்தில் தென்னாப்பிரிக்க வீராங்கனை நதீன் டி கிளார்க் அடித்த பந்தை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கேட்ச் பிடித்து இந்தியாவின் 52 ரன்கள் வெற்றியை உறுதி செய்தார். இதுகுறித்து பேசிய அவர், அந்த கடைசி விக்கெட்டை வீழ்த்த அணியில் இருந்த அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம். எனது கிரிக்கெட் பயணத்தில் நான் ஏராளமான கேட்சுகளை பிடித்துள்ளேன். ஆனால் அந்த உலகக்கோப்பையை வென்று கொடுத்த இறுதி கேட்ச் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக எப்போதும் இருக்கும். அந்த கேட்ச் பிடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்றார்.
இதற்கிடையே, 2024 மற்றும் 2025 சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு 2026 பிசிசிஐ நமன் விருதுகளில் சிறந்த சர்வதேச மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் அவர் 1703 சர்வதேச ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் 1362 ரன்கள் எடுத்து, மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஓராண்டில் 1000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற மகத்தான சாதனையை படைத்தார்.

மேலும், உலகக்கோப்பை தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 434 ரன்கள் குவித்து அசத்தினார். உலகக்கோப்பையை முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெறும் 50 பந்துகளில் சதம் விளாசிய மந்தனா, விராட் கோலியின் 52 பந்து சத சாதனையையும் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
