டாக்கா: இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்பன்ப்ரீத் கவுர் நடவடிக்கை பற்றி வங்கதேச மகளிர் அணி கேப்டன் நிகர் சுல்தானா கூறியுள்ள கருத்துகள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் பங்கேற்றது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதனால் கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கே கோப்பை என்று நிலை வந்தது.

இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 225 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த போது 33.4 ஓவரில் இருந்த போது 160 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். ஆனால் அவர்களும் சரசரவென விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களில் சுருண்டனர்.
இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் கோப்பையை பகிர வேண்டிய நிலைக்கு இரு அணிகளும் தள்ளப்பட்டனர். இந்தப் போட்டியின் போது இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் செய்த சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுவர் முடிவை ஏற்காத ஹர்மன்ப்ரீத் கவுர், களத்தில் இருந்த ஸ்டம்பை தாக்கி வெளியேறினார்.
அதுமட்டுமல்லாமல் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது நடுவர்களின் முடிவை கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டதால், இரு அணிகளும் குழுவாக போட்டோ எடுக்க கூடினர். அப்போது ஹர்மன்ப்ரீத் கவுர், வங்கதேச அணியை பார்த்து நடுவர்களையும் உடன் அழைத்து வாருங்கள் என்று வார்த்தைவிட்டார். இதனால் கோபமடைந்த வங்கதேச கேப்டன், தனது வீராஙகனை அழைத்து கொண்டு ஓய்வறைக்கு சென்றார்.
இது கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து ஹர்பம்ப்ரீத் கவுருக்கு, 75% அபராதமும் 3 டீ-மெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் நடவடிக்கை குறித்து வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா பேசுகையில், ஒரு கிரிக்கெட்டராகவும், கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் கொஞ்சம் நாகரீகத்துடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். என்ன நடந்தது என்பதை நான் சொல்லக் கூடாது. ஆனால், அந்த இடத்தில் எனது அணியுடன் இருப்பது சரியானதாக தோன்றவில்லை.
அந்த சூழலும் சரியானதாக இல்லை. அதன் காரணமாகவே நாங்கள் ஓய்வறைக்கு திரும்பி சென்றோம். கிரிக்கெட் விளையாட்டில் ஒழுக்கமும், மரியாதையும் மிகவும் முக்கியம். கள நடுவர்கள் அவுட் கொடுக்கவில்லை என்றால், அவர் அவுட் இல்லை. நடுவர்களின் முடிவை நாங்கள் ஏற்றிருப்போம். நடுவர்களின் முடிவே எப்போதும் இறுதியானது. நடுவர் அவுட் கொடுக்கவில்லை என்பதற்காக, நாங்கள் ஹர்மன்ப்ரீத்தை போல் நடந்துகொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.