“பிட்ச் மாறியதால் இந்தியா எளிதாக ஜெயித்துவிட்டது”.. தோற்றுவிட்டு புலம்பிய இங்கிலாந்து கேப்டன் புரூக்
பர்மிங்காம்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டிக்கு பின் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் தோல்விக்கான காரணத்தை பற்றி பேசினார். பிட்ச் மாறியதால் தான் இந்தியா எளிதாக ரன் குவித்தது என்றும், நடு ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தங்களது தோல்விக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் கூறினார்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த போது நல்ல துவக்கம் பெற்றது. முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. ஆனால், 61 முதல் 80 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. பின்னர் ஜோ ரூட் 76, லியாம் டாவ்சன் 68 ரன்கள் எடுத்து அணியை மீட்டனர். ஆனால், இங்கிலாந்து அணியால் 258 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி 259 ரன்கள் இலக்கை 45.2 ஓவர்களில் எல்லாம் எட்டி எளிதாக வெற்றி பெற்றது.

இதுகுறித்து போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் ஹாரி புரூக் பேசியதாவது, "நடு ஓவர்களில் வெறும் 20 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது எங்களுக்குப் பின்னடைவாக அமைந்தது. இத்தகைய சரிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. ஆனாலும், எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாகப் போராடினர். குறிப்பாக, ஜோ ரூட் மற்றும் லியாம் டாவ்சன் இடையேயான பார்ட்னர்ஷிப் மிகவும் அருமையாக இருந்தது. அவர்கள் இருவரும் அணியை மீட்டெடுத்து 258 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்ட உதவினர்.
மாறிய பிட்ச் தன்மை
முதல் இன்னிங்ஸின் முடிவில், இந்த ரன்கள் வெற்றிக்கு போதுமானது என்றே நினைத்தோம். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் பிட்ச்சின் தன்மை முற்றிலும் மாறியது போல் தோன்றியது. பிட்ச் மெதுவாக மாறியதால், இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்களைக் குவிக்க அது வழிவகுத்தது. வேறு ஒரு நாளாக இருந்திருந்தால் இதே பிட்ச்சில் நாங்கள் 300 முதல் 320 ரன்கள் வரை எடுத்திருப்போம். அப்படி எடுத்திருந்தால் எங்கள் ஸ்பின்னர்கள் போட்டியை எங்கள் பக்கம் திருப்பியிருப்பார்கள்.
மீண்டு வருவோம்
அடுத்த ஒருநாள் போட்டி கார்டிஃப் நகரில் நடைபெற உள்ளது. அங்குள்ள பிட்ச் நிலவரத்தை ஆராய்ந்து, அதற்குப் தகுந்தாற்போல் தகுதியான வீரர்களைத் தேர்வு செய்வோம். இப்போட்டியில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்திக் கொண்டு, அடுத்த போட்டியில் இன்னும் வலுவாக மீண்டு வருவோம்." என்றார் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்.


Click it and Unblock the Notifications

