15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு இதெல்லாம் தேவையா? ஹர்ஷா போக்ளே ஆவேசம்.. ஷமிக்கு இவர் துணை கேப்டனா?
மும்பை: துலீப் டிராபி கிரிக்கெட் தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டதற்கு, பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து ஹர்ஷா போக்ளே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சிவப்பு பந்து (டெஸ்ட்) கிரிக்கெட் விளையாடும் ஒரு சீனியர் அணியின் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷியை நியமித்ததன் பின்னணியில் என்ன சிந்தனை இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. அவர் இதுவரை 12 இன்னிங்ஸ்களில் விளையாடி 17.25 சராசரியுடன் வெறும் 207 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரிடம் அசாத்திய திறமை உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கற்றுக்கொள்வதற்கும் முதிர்ச்சியடைவதற்கும் ஒரு நீண்ட வழிமுறை உள்ளது. சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அவர் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹர்ஷா போக்ளேவின் இந்த கருத்திற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இளம் வீரர்களுக்கு இவ்வளவு சிறிய வயதில் கேப்டன்சி பொறுப்பை வழங்குவது அவர்களின் இயல்பான ஆட்டத்தைப் பாதிக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு உதாரணமாக, 1990-களின் இறுதியில் சச்சின் டெண்டுல்கர் இளம் வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்றபோது, அந்த அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் அவரது ஆட்டம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இஷான் கிஷன் கேப்டனாக இருக்கும் கிழக்கு மண்டல அணியில் முகமது ஷமி இடம் பெற்றுள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த ஷமிக்கு 15 வயது வைபவ் துணை கேப்டனா? என்ற கோணத்திலும் சில ரசிகர்கள் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர்.
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் சீசன் ஆகஸ்ட் 23 முதல் துலீப் டிராபி தொடருடன் தொடங்க உள்ளது. இதில் முதலாவது போட்டியில் கிழக்கு மண்டல அணியும், வடக்கு மண்டல அணியும் மோத உள்ளன. இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணியில் வைபவ் சூர்யவன்ஷி (துணை கேப்டன்), முகமது ஷமி, முகேஷ் குமார் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் போன்ற அனுபவமிக்க பல வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 15 வயது இளம் வீரருக்குத் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்ட விவகாரம் தற்போது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications
