பொறுப்பற்ற தன்மை
அவர் கலந்து கொண்ட பார்ட்டியில் பல முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். கனிகாவின் பொறுப்பற்ற தன்மையை அவர் பெயரை குறிப்பிடாமல் விளாசி இருக்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே.
கொரோனா வைரஸ் தாக்கம்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் பரவத் துவங்கிய இந்த வைரஸ், பின் உலகம் முழுவதும் சுமார் 130க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது. இந்தியாவிலும் தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
பலி எண்ணிக்கை
உலகம் முழுவதும் சுமார் 2,75,000 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 11,400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
தனிமை அவசியம்
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கூறப்பட்டு வருகிறது. கொரோனா நோய்க்கான அறிகுறிகள் இருப்பவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை கனிகா சற்றும் கண்டு கொள்ளவில்லை.
ஐரோப்பிய நாடுகள்
கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது.. இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகள் மக்களை வெளியே வர வேண்டாம் என அறிவித்துள்ளனர். அங்கே நிலைமை மோசமாக உள்ளது. இங்கிலாந்திலும் வேகமாக பரவி வருகிறது.
பரிசோதனையில் எஸ்கேப்
பாலிவுட் பாடகி கனிகா கபூர் சமீபத்தில் இங்கிலாந்து சென்று வந்தார். ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்தால் விமான நிலையத்தில் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால், அதை சமாளித்து, பரிசோதனை செய்யாமல் மும்பை நகருக்குள் நுழைந்தார்.
பார்ட்டிகளில் பங்கேற்றார்
பின் அங்கே நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அவர், சில பார்ட்டிகளில் பங்கேற்றார். அடுத்து லக்னோவில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் வசுந்தரா ராஜே, அவரது மகன் துஷ்யந்த் மற்றும் சில எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
அரசியல்வாதிகள் பீதி
அடுத்த சில நாட்களில் கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், அந்த பார்ட்டிகளில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள் பீதியில் உள்ளனர். அவரால் பல நூறு பேருக்கும் மேல் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
ஹர்ஷா போக்ளே விளாசல்
இந்த நிலையில், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, "பல மக்கள் மிகவும் கடினமாக முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, சில முட்டாள், படித்த மக்கள், பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்து பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். கோடிக்கணக்கானவர்கள் சரியாக இருக்கலாம். ஆனால், தோல்வி அடைய சில அறிவற்ற மக்கள் போதும்" என சாடி உள்ளார்.
இது தவறு
கனிகா கபூரை தான் ஹர்ஷா கடுமையாக விமர்சித்து இருக்கிறார். சிலரால் பல ஆயிரம் பேருக்கு கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், படித்தவர்களே அதை சரியாக கடைபிடிக்கவில்லை என குற்றம் சாட்டி இருக்கிறார்.