ஹர்சித் ராணாவை எப்படி சேர்த்தீங்க? ஷமி, கோலி, ரோகித்துக்கு மட்டும் வேறு நியாயமா?- தமிழக வீரர் கேள்வி
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்காக ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டதை இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சதாகோபன் ரமேஷ், வெளிப்படையாக விமர்சித்துள்ளார். காயம் காரணமாக நீண்ட காலம் விளையாடாமல் இருந்த ஒரு வீரரை, எவ்வித உள்நாட்டு கிரிக்கெட் அனுபவமும் இன்றி நேரடியாக இந்திய அணிக்குள் கொண்டு வந்தது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த டி20 உலகக்கோப்பை 2026 தொடருக்கு முன்பாக, ஹர்ஷித் ராணாவின் வலது முழங்காலில் தசைநார் பாதிப்பு ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அவர் உலகக்கோப்பை தொடரிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் 2026 சீசனிலும் பங்கேற்கவில்லை. முழுமையான குணமடைந்து திரும்புவதற்காக அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த சூழலில், தற்போது அணியில் இடம் பிடித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரமேஷ், "ஹர்ஷித் ராணா எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்? முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் எந்தவொரு உள்நாட்டுப் போட்டியிலும் விளையாடவில்லை. பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியில் விளையாடியதே அவரது கடைசி ஆட்டம். இதற்கு யாரிடமும் பதில் இல்லை. முகமது ஷமி அல்லது பிற வீரர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
காயத்திலிருந்து மீண்டு வரும் வீரர்கள், மீண்டும் இந்திய அணியில் இடம்பெற உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பதே பிசிசிஐ-யின் வழக்கமான நடைமுறை. விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது ஷமி போன்ற நட்சத்திர வீரர்களே இந்த நடைமுறையைப் பின்பற்றியுள்ளனர் என்பதை ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
"விராட் கோலியோ அல்லது ரோகித் சர்மாவோ, யாராக இருந்தாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினால் மட்டுமே அணியில் சேர முடியும் என்று நிர்வாகம் கூறியது. ஹர்திக் பாண்டியா காயமடைந்தபோதும் இதே தகுதிச் சோதனை வைக்கப்பட்டது. ஷமிக்கும் அதே விதிமுறைதான். தற்போதைய டி20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூட, நியூசிலாந்து தொடருக்கு முன் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி தன் தகுதியை நிரூபித்தார்" என ரமேஷ் பட்டியலிட்டார்.
இந்திய அணியில் மீண்டு வர விரும்பும் எந்தவொரு வீரரும் உள்நாட்டுப் போட்டிகளின் மூலம் தங்களது உடற்தகுதியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முன்னுதாரணத்தை நிர்வாகம் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. வரும் ஜூன் 26 அன்று பெல்ஃபாஸ்டில் தொடங்கவுள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில், ஹர்ஷித் ராணா நேரடியாக பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications

