டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல். பெட்டிங் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்ததால்தான் இப்படி ஒரு முடிவை டோணி எடுக்க நேரிட்டதோ என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் படுமோசமாகத்தான் விளையாடியது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென டோணி, தாம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டோணியின் இந்த அறிவிப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் தீவிரமாக 'ஆராய்ந்து' வருகிறன்றனர்.
இந்த 'ஆராய்ச்சிகளில்' ஒன்றுதான், பெட்டிங் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 'குட்டு' வைத்ததாலேயே டோணி ஓய்வுபெற்றுவிட்டார் என்பதும்!
6வது ஐ.பி.எல். போட்டிகளின் போது பெட்டிங், பிக்சிங் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், பெட்டிங் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், நாள்தோறும் டோணியின் அறைக்க் சென்று திரும்பியதை பதிவு செய்துள்ளது.
இந்த சந்திப்புகளின் போது சென்னை அணியின் வியூகங்கள் குறித்து குருநாத் மெய்யப்பனிடம் டோணி விளக்கியிருக்கலாம் என்றும் முட்கல் அறிக்கை கூறியிருந்தது. இந்த அறிக்கை மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் டோணிக்கும் குட்டு வைத்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த என். சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்து கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் டோணி இருப்பது குறித்தும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. முன்னர் முட்கல் கமிட்டியிடம் டோணி சாட்சியம் அளித்த போதே அவர் கேப்டன் பதவியை விட்டு விலகுவார் என்று கூறப்பட்டது.
தற்போது பெட்டிங் மற்றும் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமம் ரத்தாகும் நிலை உள்ளது. இப்படி ஒரு நெருக்கடியான நிலையில்தான் டோணி தமது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.