திருப்பிக் கொடுத்தேன்
இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ள ராபின் உத்தப்பா, "உலகக் கோப்பை தொடரை என்னால் மறக்கவே முடியாது. இரு அணியினரும் சீண்டலில் ஈடுபட்டோம். நான் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஹெய்டன் என்னை சீண்டினார். மற்ற ஆஸ்திரேலிய வீரர்களும் அதையே ஃபாலோ செய்தனர். அப்போது அவர்களை நோக்கிப், "நானும் நிச்சயம் திருப்பிக் கொடுப்பேன்' என்றேன். அதேபோல் ஹேய்டன் பேட்டிங் செய்யும்போது நான் சீண்டினேன். அப்போது அவர் என்னை நோக்கி ஏதோ சொன்னார். எனக்கு அது சரியாகக் கேட்கவில்லை.
நட்பை தவறவிட்டேன்
இதனால் அவர் என்னிடம் 2-3 வருடங்கள் பேசாமல் இருந்தார். ஏனெனில், அந்த நேரத்தில் வெற்றி மட்டுமே முக்கியமாகப்பட்டது. நான் வெற்றிப் பெற விரும்பினேன், முடிந்தவரை அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். நான் அதைச் செய்தேன். நாங்கள் வென்றோம், ஆனால் என்னை உண்மையிலேயே இன்ஸ்பைர் செய்த ஒருவரின் நட்பை தவறிவிட்டேன்" என்றார்.
சீண்டிய வீரர்கள்
அதன்பின் இந்தியாவில் நடந்த 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலியா வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தது வேறு விஷயம். இத்தொடரை 4-2 என்று ஆஸ்திரேலியா கைப்பற்றினாலும், தொடர் முழுவதும் பவுன்சர், உரசல், பந்தை எறிதல் என்று இந்திய வீரர்களை உரசிக் கொண்டே இருந்தனர். அப்போது சச்சின், கங்குலி, டிராவிட் என்று இந்திய அணி சீனியர் வீரர்களைக் கொண்டிருந்தது. இதனால், தோனி தனக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி, இளவட்ட வீரர்களை வைத்துக் கொண்டு, ஆஸி., பேட்ஸ்மேன்களை படுத்தி எடுத்தது குறிப்பிடத்தக்கது.
சில்லி திசையில்
இதுகுறித்து பேசிய உத்தப்பா, "அந்த ஒருநாள் தொடரில், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட வீரர்களை டிஸ்டர்ப் செய்ய, தோனி என்னை சில்லி திசையில் நிற்கவைப்பார். அந்த நினைவுகளை எப்போதும் மறக்க முடியாது" என்றார். மேலும், ஃபீல்டிங்கில் சொதப்பிய பல இந்திய சீனியர் வீரர்களை தோனி கவனித்து, அவர்களை நீக்கத் தொடங்கியதும், இந்த தொடரில் இருந்து தான். ஆனால், இந்த ஒருநாள் தொடரில், சச்சின் - கங்குலி ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.