கொல்கத்தா : சர்வதேச கிரிக்கெட் உலகில் அரசன் என்று ரசிகர்களால் போற்றப்படும் விராட் கோலியின் 35 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதே நாளில் இந்திய அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கியமான லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்த பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தி முதலிடத்தில் நிறைவு செய்யுமா என்பதைத்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் விராட் கோலியின் இன்றைய பிறந்த நாளில் அவர் ஏதேனும் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விராட் கோலி பிறந்த நாளை உற்சாக கொண்டாடும் வகையில் கொல்கத்தாவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலிக்கு கேக் வெட்டி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் பார்வையாளர்களுக்கு விராட் கோலியின் முகமூடியை வழங்குவது போன்ற பல கோலாகல ஏற்பாட்டுக்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதம் அடித்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சினின் சாதனையை அவர் சமன் செய்து விடுவார்.
இதன் காரணமாக பிறந்தநாள் அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதேபோன்று பிறந்த நாளன்று சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் ,வினோத் காம்ப்ளி ஆகியோர் தான் இருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் மூன்றாவதாக இணைய விராட் கோலிக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் இந்த பட்டியலில் மொத்தம் 12 வீரர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் விராட் கோலி இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.