ஜெட்டா: டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக தமிழக வீரர் நடராஜன் ரூ.10.75 கோடிக்கு வாங்கப்பட்டதற்கு பின் இருக்கும் காரணம் தெரிய வந்துள்ளது. அந்த அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி பிடிவாதமாக நடராஜன் டெல்லி அணிக்கு வேண்டும் கேட்டதன் காரணமாக, ஸ்டார்க் இருந்த போதும் நடராஜன் வாங்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் தமிழக வீரர் நடராஜன் ரூ.10.75 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஏற்கனவே மிட்சல் ஸ்டார்க்கை ரூ.11.75 கோடிக்கு வாங்கிய டெல்லி அணி, மற்றொரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் நடராஜன் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றாலும், அவர் தொடர்ந்து காயமடையக் கூடிய வீரராக இருந்துள்ளார். இதன் காரணமாகவே ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு பெரிய தொகை கிடைத்ததில்லை. கடந்த சீசனில் கூட அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் டாப் 3ல் இருந்தாலும், சீசனின் தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாடவில்லை.
தற்போது கூட அவரின் பவுலிங் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ஐதராபாத் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகளுடன் மிகப்பெரிய மோதலில் ஈடுபட்டு நடராஜனை டெல்லி அணி வாங்கியுள்ளது. இதன் மூலமாக டெல்லி அணியின் பவுலிங் லைன் அப் மிகச்சிறப்பாக அமைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அக்சர் படேல் மற்றும் குல்தீப் இருவரும் ரீடெய்ன் செய்யப்பட்டிருந்தனர்.
தற்போது மிட்சல் ஸ்டார்க் மற்றும் நடராஜன் என்று இரு தரமான இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் வாங்கப்பட்டிருப்பதன் மூலமாக, 16 ஓவர்களை வீச டெல்லி அணி சரியாக வீரர்களை வாங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடராஜனை வாங்க வேண்டும் என்ற முடிவை டெல்லி அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானியே எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக தான் டெல்லி அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானி கொண்டு வரப்பட்டிருந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான ஹேமங் பதானி, டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளராக 3 முறை கோப்பையை வென்றுள்ளார். இதனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீரர் குறித்தும் போதுமான தகவலை அறிந்து வைத்திருப்பவர்.
இதனால் நடராஜனை நிச்சயம் மெகா ஏலத்தில் வாங்க வேண்டும் என்று பயிற்சியாளர் ஹேமங் பதானி பிடிவாதமாக இருந்திருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மற்றொரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மட்டும் போதுமென்றால் கலீல் அஹ்மத்தை ஆர்டிஎம் மூலம் டெல்லி அணி நிர்வாகம் வாங்கி இருக்கலாம். ஆனால் எளிதாக சிஎஸ்கே அணிக்கு விட்டுக் கொடுத்ததன் மூலம், டெல்லி அணியின் டார்கெட் நடராஜன் என்பது புரிய வருகிறது.