மான்செஸ்டர்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஆனால் 4ஆம் நாள் முடிவில் மழையால் ஆஸ்திரேலியா அணி கம்பேக் கொடுத்துள்ளது. 4ஆம் நாள் இங்கிலாந்து அணி மொத்தமாக 30 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்கள் சேர்த்துள்ளது. அதேபோல் வெளிச்சம் குறைந்த போது இங்கிலாந்து அணி விக்கெட் வீழ்த்துவதற்காக ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் லபுஷேன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது சதத்தை லபுஷேன் விளாசினார். இருப்பினும் 111 ரன்களில் லபுஷேன் ஆட்டமிழந்த நிலையில், மார்ஷ் - க்ரீன் கூட்டணி இணைந்து தேநீர் இடைவேளை வரை தாக்கு பிடித்தது.
அதன்பின் மீண்டும் மழை வர ஆஸ்திரேலிய ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். ஆஸ்திரேலிய அணி இன்னும் 61 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில், களத்தில் மார்ஷ் - க்ரீன் இருக்கிறார்கள். அதேபோல் அலெக்ஸ் கேரி, ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோராலும் பேட்டிங் செய்ய முடியும். இதனால் ஆஸ்திரேலிய அணி டிராவுக்காக போராடும் என்று எதிர்பார்க்கலாம்.
அதுமட்டுமல்லாமல் 5ஆம் நாள் வானிலையும் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக உள்ளது. 4ஆம் நாளினை விடவும், 5ஆம் நாளில் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கபடுகிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய ரசிகர்களும், வீரர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதேபோல் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற ஒரேயொரு வாய்ப்பு உருவாகியுள்ளது. 5ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றால் 98 ஓவர்கள் வீசுவதற்கு அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.