மும்பை: இந்திய அணியின் துணை கேப்டன் என்பதை ரிஷப் பண்ட் மறந்துவிட வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை சொல்லுமாறு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியிருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 20 முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு முன்பை விட கூடுதல் பொறுப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இவர்கள் தலைமையிலான இந்திய அணி கடினமான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய மூத்த வீரர்கள் இல்லாத டெஸ்ட் அணி இங்கிலாந்தில் விளையாட உள்ளதால், ரிஷப் பண்ட்டுக்கு அதிக சுமை இருக்கிறது. அதே சமயம், அவரது பேட்டிங் சமீப காலமாக மோசமடைந்து வருகிறது.
இந்த நிலையில், அது குறித்து பேசிய ஹேமங் பதானி, ரிஷப் பண்ட் அவருடைய பேட்டிங் முறையை மாற்றிக் கொள்ளக் கூடாது எனவும், அவர் இதுவரை ஆடிய ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடுமாறு அவரிடம் கௌதம் கம்பீர் சொல்ல வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
இது பற்றி பதானி பேசியதாவது: "ரிஷப் பண்ட் அவரது ஆட்டத்தையும் ஒரு அங்குலம் கூட மாற்றக்கூடாது. அவர் அதிரடியாக ஆடுவதற்கும், தற்காத்து ஆடுவதற்குமான பேட்டிங் ஸ்டைலை வைத்துள்ளார். அதை மாற்றுவதற்கு எந்த விதமான காரணமும் இல்லை என்று நான் நினைக்கிறேன். கௌதம் கம்பீர் போன்ற ஒருவர் அவரிடம் பேச வேண்டும். 'ரிஷப், நீ உன்னுடைய ஆட்டத்தை ஆடு. கேப்டன்சி பற்றியோ, துணை கேப்டன்சி பற்றியோ, நீதான் அணியில் இரண்டாவது முக்கியமான நபர் என்பதை பற்றியோ அதிகமாக யோசிக்க வேண்டாம்' என்று சொல்ல வேண்டும்."
"நீ சில ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட முறையில் ஆடி இருக்கிறாய். அது உனக்கு நன்றாக வேலை செய்துள்ளது. அதை நீ மீண்டும் செய்தால் அது எங்களுக்கு தொடர்ந்து வேலை செய்யும். ஏனென்றால், இரண்டாவது புதிய பந்து வருவதற்கு முன் நன்றாக பேட்டிங் செய்யும் வீரராக நீ இருக்கிறாய் என்று சொல்ல வேண்டும்.
எதிரணியின் பவுலர்களை நீ அடித்து ஆடுகிறாய். அவர்கள் எப்போதும் அழுத்தத்திலேயே இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப அதிக பந்துகளை நீ விடுவதில்லை. ஒருவேளை பந்துவீச்சாளர்கள் நல்ல லைன் மற்றும் லெந்தில் பந்து வீசினால், அவர்கள் பந்து வீசுவது எளிதாகிவிடும். விக்கெட்டுகள் வீழ்த்த முயற்சிப்பார்கள்.
ரிஷப் பண்ட், ரிஷப் பண்ட்டாகவே யோசிக்க வேண்டும். வேறு எப்படியும் யோசிக்கக்கூடாது. இந்திய அணி நிர்வாகம் அவர் ஒரு சுதந்திரமான பேட்ஸ்மேனாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவருக்கான சுதந்திரத்தை அளித்து ஆட வைக்க வேண்டும். அவரை இழுத்துப் பிடிக்கக் கூடாது. ஒரு பேட்ஸ்மேன் சமநிலையில் இருப்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே சவால். ஆனால் அவரிடம் அந்த சமநிலை இயல்பாகவே உள்ளது" என்று கூறினார் ஹேமங் பதானி.