
இந்திய பவுலிங்
நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் இரண்டே விக்கெட்டுகளை இழந்து, 196 ரன்கள் குவிக்க இந்திய பந்துவீச்சு காரணம். அந்த அணி தொடக்க வீரர் கொலின் முன்ரோ வெறும் 58 பந்துகளில் 109 ரன்கள் குவித்து நாட்-அவுட்டாக நின்றது இதற்கு உதாரணம். அறிமுக வீரர் முகமது சிராஜ் 4 ஓவர்களில் 53 ரன்களை வாரி கொடுத்தார். ஒரு ஆறுதல் விக்கெட் கிடைத்தது. இதுபோன்ற பேட்டிங் பிட்சில் அதுவும் டி20 போட்டியில், இளம் வீரரை அறிமுகம் செய்ய வைத்ததே தவறான செயல்தான். பந்து வீச்சாளரை இந்த அடி, மனரீதியாக பின்னடைவுக்கு உள்ளாக்கியிருக்கும்.

ஓப்பனிங் சொதப்பல்
பெரிய ஸ்கோரை விரட்டும்போது ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் மிக முக்கியம். பந்துகளைவிட ரொம்ப அதிகம் வேண்டாம், கொஞ்சமே அதிகம் ரன்களை சேகரித்தாலும்போதும். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் குறைந்தது 50 ரன்களுக்காவது இருந்திருக்க வேண்டும். ஆனால் தவான் 1, ரோஹித் 5 ரன்களில் வெளியேறியது முதலிலேயே இந்திய அணியை வீழ்த்திவிட்டது.

பெரிய தப்பு இது
இதுபோன்ற பெரிய ஸ்கோரை துரத்த வேண்டிய நெருக்கடியான நேரத்தில், அதுவும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் உடனே வெளியேறிய நிலையில், புதுமுக வீரர் ஸ்ரேயாஷ் ஐயர் 3வதாக களமிறக்கப்பட்டது பெரும் தவறு. அவர் உடனே எப்படி அதிரடியாக ஆட முடியும்? ரன் சேகரித்து தனது இருப்பை நிலைநிறுத்த பார்ப்பாரா, அவுட்டானாலும் பரவாயில்லை, அதிரடி காட்டி வெளியேறலாம் என்று நினைப்பாரா? ஷ்ரேயாஸ் ஐயர் 21 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். குறைந்த பந்துகளில் இந்த ரன்களை அவர் எடுத்திருந்தால் டேமேஜ் குறைந்திருக்கும்.

டோணி பேட்டிங்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா 2 பந்துகளை சந்தித்து 1 ரன்னில் கிளீன் பௌல்ட் ஆனார். அவர் இத்தொடரில் தொடர்ந்து 2வது முறையாக ஏமாற்றியுள்ளார். மற்றொரு விஷயம், டோணி பேட்டிங். டோணி களமிறங்கியபோது மறுபக்கம் கோஹ்லி வெகு சிறப்பாக ஆடினார். டோணி உடனே ரன் குவிக்கும் பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால் கோஹ்லிக்கு சிங்கிள்களை தட்டிக்கொடுத்து தனது கடமையை நிறைவேற்ற தவறிவிட்டார். பந்துகளுக்கு ஏற்பத்தான் டோணியால் ரன் எடுக்க முடிந்தது. அதுவும் ஹிட் அடிக்க முயன்று பல பந்துகளை டாட் பால் ஆக்கி, கோஹ்லிக்கு நெருக்கடியை அதிகரித்துவிட்டார். இதனால் வேறு வழியின்றி வழக்கத்திற்கு மாறான ஷாட்டுகளை ஆடி கோஹ்லி அவுட்டானார்.


Click it and Unblock the Notifications











