தோனி விடுப்பு
தோனி 2019 உலகக்கோப்பை தொடர் முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. சுமார் 6 மாத காலமாக விடுப்பில் இருக்கிறார் அவர். இதற்கிடையே தோனி இனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடவே மாட்டார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
எதிர்காலம் என்ன?
தோனி எதிர்காலம் என்ன என்பது குறித்து பிசிசிஐ, கேப்டன் கோலி என யாரும் தெளிவான பதிலைக் கூறவில்லை. தோனியிடம் இது பற்றி ஒரு முறை கேட்ட போது ஜனவரி வரை எதுவும் கேட்காதீர்கள் என்றார்.
ஜனவரி வந்த தகவல்
இந்த நிலையில், ஜனவரி மாதம் வெளியாகி உள்ள பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இதை குறித்து தான் தோனி ஜனவரி வரை காத்திருங்கள் என கூறினாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒப்பந்தப் பட்டியல்
பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தந்தில் 27 வீரர்கள் பெயர் இடம் பெற்று இருந்தது. ஆறு புதிய வீரர்கள் பெயரும் இடம் பெற்று இருந்தது. மூத்த வீரர் தோனி முதன் முறையாக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.
பரவிய வதந்தி
தோனி பெயர் ஒப்பந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை என்றதும் பல்வேறு ஊகங்கள் மற்றும் வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. சிலர் இனி தோனி இந்திய அணியில் இடம் பெறவே முடியாது என கூறி வருகின்றனர்.
ஒரே ஒரு தொடர் மட்டும்
சிலர் தோனிக்கு கடைசியாக விடை கொடுக்கும் வகையில் பிசிசிஐ, ஒரே ஒரு கடைசி தொடரில் ஆட அனுமதி அளிக்கும் என கூறி வருகின்றனர். ஆனால், இது இரண்டுமே உண்மை இல்லை என பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.
உண்மை என்ன?
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம் பெற ஒரு வீரர் குறிப்பிட காலத்திற்குள் குறிப்பிட்ட அளவு போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. அந்த வகையில், தோனி எந்தப் போட்டியிலும் ஆடாமல் விடுப்பில் இருந்ததால் தான் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.
விதிமுறை என்ன?
ஒரு வீரர் இந்த ஒப்பந்தம் துவங்கும் அக்டோபர் 2019 முதல் தற்போது வரை மூன்று டெஸ்ட் அல்லது எட்டு ஒருநாள் போட்டிகள் அல்லது மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
தோனி நிலை என்ன?
தோனி ஜூலை 10 முதல் இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார். எந்தப் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. அதனால் தான் அவர் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார் எனவும், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்று, இந்திய டி20 அணியில் நுழைய வாய்ப்புள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரம் கூறியுள்ளது.
அடுத்த திட்டம் என்ன?
தோனி தான் அடுத்த கட்டம் குறித்து தன் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும், பிசிசிஐ தோனியை கடந்து விட்டதையும் இந்த ஒப்பந்த நீக்கம் தெளிவாக கூறிவிட்டது. இனி அணிக்குள் நுழைய வேண்டும் என்றால் தோனி தான் அதற்கான செயல்களை செய்ய வேண்டும். என்ன செய்யப் போகிறார் தோனி?