மும்பை: உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் கடந்த 12 மாதங்களில் அதிக வருமானம் ஈட்டிய டாப் 10 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலியும் இடம்பிடித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த செப்டம்பர் மாதம் வரையிலான வருமானம் மட்டும் ரூ.847 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச அளவில் இந்தியா விளையாட்டு வீரர்களின் முகமாக அறியப்பட்டு வருகிறார். டி20 உலகக்கோப்பையின் போது விராட் கோலியை கொண்டே அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்தன. விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்கவே ரசிகர்கள் குவிந்து வந்தனர்.

விராட் கோலி ரன்கள் சேர்த்தாலும் சரி, சேர்க்கவில்லை என்றாலும் சரி.. கேப்டனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. அதேபோல் விராட் கோலி என்ற பெயர் சர்வதேச அளவில் பிராண்டாக மாறிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. கால்பந்து வீரர்கள், டென்னிஸ் வீரர்கள் என்று பலரும் விராட் கோலியை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த செப்டம்பர் மாதம் வரையிலான 12 மாதங்களில் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதில் டாப் 10ல் விராட் கோலியும் இடம்பிடித்திருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்த பட்டியலில் என்சிஏ சூப்பர்ஸ்டார் ஸ்டீபன் கரி ரூ.831 கோடி வருமானத்துடன் 10வது இடத்தில் இருக்கிறார்.
அதேபோல் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ.847 கோடி வருமானத்துடன் 9வது இடத்திலும், பிரான்ஸ் கால்பந்து வீரர் கரீன் பென்சமா ரூ.864 கோடியுடன் 8வது இடத்திலும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ரூ. 864 கோடியுடன் 7வது இடத்திலும், என்பிஏ நட்சத்திர வீரர் ஜியானிஸ் ரூ.873 கோடி வருமானத்துடன் 6வது இடத்திலும், நட்சத்திர கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பே ரூ.881 கோடி வருமானத்துடன் 5வது இடத்தில் இருக்கின்றனர்.
அமெரிக்கா கூடைப்பந்து ஜாம்பவான் லெப்ரான் ஜேம்ஸ் ரூ.990 கோடி வருமானத்துடன் 4வது இடத்திலும், அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி ரூ.1,074 கோடி வருமானத்துடன் 3வது இடத்திலும், ஸ்பெய்ன் கோல்ஃப் வீரர் ஜான் ராஹிம் ரூ.1,712 கோடி வருமானத்துடன் 2வது இடத்திலும், போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.2,081 கோடி வருமானத்துடன் முதலிடத்திலும் இருக்கிறார்.
பெரும்பாலும் கால்பந்து வீரர்கள் கோலோச்சினாலும், டாப் 10ல் இடம்பிடித்துள்ள ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அண்மை காலங்களில் விராட் கோலி இந்தியாவில் தங்காமல் தனது குடும்பத்துடன் லண்டனிலேயே வசித்து வருகிறார். அதேபோல் நீண்ட காலமாக இருந்த மேனேஜரை நீக்கிய விராட் கோலி, சொந்தமாகவே பிஆர் நிறுவனத்தை தொடங்கினார்.
விராட் கோலியின் அந்த நிறுவனம் அவரின் பிராண்டை இன்னும் பெரிதாக கொண்டு சென்றுள்ளதாக பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் மூலம் ஈட்டிய வருமானத்தை ரெஸ்டாரெண்ட், ரியல் எஸ்டேட், ஆடை உற்பத்தி உட்பட ஏராளமான தொழில்களில் விராட் கோலி முதலீடு செய்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் இந்தியாவில் ஒரு பிராண்டை கொண்டு செல்ல விராட் கோலியே முதன்மையான சாய்ஸாக இருந்து வருகிறார்.
இதனால் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் விராட் கோலியின் வருமானத்தை உயர்த்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும் விராட் கோலி ரூ.66 கோடியை வருமான வரியாக கட்டியிருக்கிறார். இதன் மூலமாக அதிக வருமான வரி கட்டும் விளையாட்டு வீரர் என்ற அந்தஸ்தையும் விராட் கோலி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.