
முதலில் ஆடிய ஹைதராபாத்
முதலில் ஆடிய ஹைதராபாத் உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ரன்களைக் குவித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 205 ரன்களைக் குவித்தது.

நல்ல தொடக்கம் தந்த ஷிகர் தவான், பின்ச்
ஹைதராபாத் அணிக்கு ஷிகர் தவானும், பின்ச்சும் நல்ல தொடக்கம் தந்தனர். இருவரும் இணைந்து 65 ரன்களைச் சேர்த்தனர்.

பின்னர் வந்து பின்னி எடுத்த நமன் ஓஜா
பின்னர் வந்த நமன் ஓஜா ரன்களைக் குவித்து விட்டார். அதிரடியாக ஆடிய அவர் பஞ்சாப் பந்து வீச்சை நையப்புடைத்தார். பிரமாதமாக ஆடிய இவர்36 பந்துகளில் 79 ரன்களைக் குவித்தார். மேலும் 7 இமாலய சிஸ்கர்களையும் விளாசினார்.

அதி வேக வார்னர்
பின்னர் வந்தவர்களில் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 44 ரன்களைக் குவித்தார்.

வெளுத்துக்கட்டிய சஹா, மேக்ஸ்வெல்
பின்னர் கடினமான இலக்கை படு ஹாயாக எதிர்கொண்டது பஞ்சாப் அணி. பந்து வீச்சில் கோட்டை விட்டாலும் கூட பேட்டிங்கில் ஹைதராபாததைப் பதம் பார்த்து விட்டது. குறிப்பாக விருத்திமான் சஹா, கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் பிரமாதமாக ஆடினர். மனான் வோஹ்ராவும் தன் பங்குக்கு பட்டையைக்
கிளப்பினார்.

சஹா பிரமாதம்
சஹா பிரமாதமாக ஆடினார். 26 பந்துகளில் 54 ரன்களை அவர் குவித்தார்.

சிரித்துச் சிரித்து ஹைதராபாத்தை சிதைத்த மேக்ஸ்வெல்
அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் வழக்கம் போல சிரித்த முகத்துடன் ஹைதராபாத்தை சீர்குலைத்தார். குறைந்த ரன்களில் அவர் இருந்தபோது அவுட்டானார். ஆனால் அதை அம்பயர் நோ பால் என்று கூறியதால் மேக்ஸ்வெல் தப்பினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் 22 பந்துகளில் 43 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

பெய்லி
கடைசியில் கேப்டன் பெய்லி அணியை வெற்றி இலக்கைத் தொட்டு வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். 18.4 ஓவர்களிலேயே 211 ரன்களைக் குவித்து 4 விக்கெட்களை மட்டுமே இழந்து அபார வெற்றியைப் பெற்றது பஞ்சாப்.

8வது வெற்றி
பஞ்சாப்புக்கு இது 10 போட்டிகளில் 8வது வெற்றியாகும். புள்ளிகள் பட்டியலில் தற்போது இது முதலிடத்திற்கு வந்துள்ளது.

ஒரே அணி...
200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து இருமுறை வெற்றி பெற்ற ஒரே அணியாக பஞ்சாப் நேற்று உருவெடுத்தது.

அதி வேக 100 - 150
மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதி வேகமாக 100 மற்றும் 150 ரன்களை எடுத்த அணியும் பஞ்சாப்தான்.

23ல் விட்டதை 43ல் பிடித்த மிஸ்ரா, ஸ்டெயின்
மேக்ஸ்வெல் 23 ரன்களில் இருந்தபோது அமீத் மிஸ்ரா பந்து வீச்சில், ஸ்டெயினிடம் கேட்ச் ஆனார். ஆனால் அது நோபாலாகி விட்டதால் தொடர்ந்து ஆடினார். பின்னர் அதே மிஸ்ரா பந்து வீச்சில், ஸ்டெயினிடம் 43 ரன்களாக இருந்தபோது கேட்ச் ஆகி வெளியேறினார் மேக்ஸ்வெல்.

500 ரன்களைக் கடந்த மேக்ஸ்வெல்
நடப்பு ஐபிஎல் தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் மேக்ஸ்வெல்தான். தற்போது அவர் 10 போட்டிகளில் 517 ரன்களைக் குவித்துள்ளார்.

அடேங்கப்பா சிக்ஸர்கள்
மேலும் மேக்ஸ்வெல் இதுவரை 34 சிக்ஸர்களைக் குவித்து அதிலும் முதலிடத்தில் இருக்கிறார். நேற்றைய போட்டியில் மட்டும் அவர் 5 சிக்ஸர்களை விளாசினார்.

சிக்ஸ் மழை...
நேற்றைய போட்டியில் இரு அணிகளுமே சிக்ஸர்களைப் பொறிந்து தள்ளி விட்டன. இரு அணிகளும் தலா 12 சிக்ஸர்களை விளாசின.


Click it and Unblock the Notifications











