மும்பை: இந்தியாவின் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் டிராபியில், ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி, இதுவரை யாரும் படைத்திராத ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, துலீப் டிராபி வரலாற்றிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பெங்களூருவில் நடைபெறும் துலீப் டிராபி காலிறுதிப் போட்டியில், வடக்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் அகிப் நபி, கிழக்கு மண்டல அணிக்கு எதிராக இந்த மெகா சாதனையை நிகழ்த்தினார். போட்டியின் 53-வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில், விராட் சிங், மனிஷி மற்றும் முக்தார் ஹுசைன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். பின்னர், தனது அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே சூரஜ் சிந்து ஜெய்ஸ்வாலின் விக்கெட்டையும் வீழ்த்தி, 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் என்ற வரலாற்றுச் சாதனையை முடித்தார்.

மேலும், துலீப் டிராபி வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர் அகிப் நபி ஆவார். இதற்கு முன்பு, 1978-ல் ஜாம்பவான் கபில் தேவ் மற்றும் 2001-ல் சைராஜ் பஹுதுலே ஆகியோர் மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தனர். 47 ஆண்டுகளுக்குப் பிறகு, கபில் தேவின் சாதனையை மீண்டும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் நிகழ்த்தியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்தப் போட்டியில், அகிப் நபி 10.1 ஓவர்கள் வீசி, 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு பேசிய 28 வயதான அகிப் நபி, தனது கனவு இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடுவதுதான் என்று உருக்கமாகத் தெரிவித்தார். "இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே உங்கள் இலக்காக இருக்கும்போது, வசதிக் குறைபாடுகள் ஒரு பொருட்டே அல்ல. சாக்குப்போக்கு சொல்ல முடியாது. இந்திய டெஸ்ட் அணியின் வெள்ளை உடை அணிவதே என் கனவு." என்றார்.
பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்ட அகிப் நபி, 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் விளாசி, தனது ஆல்-ரவுண்டர் திறமையையும் வெளிப்படுத்தினார்.
அகிப் நபியின் இந்த அபாரமான பந்துவீச்சை சக வீரரான அர்ஷ்தீப் சிங் வெகுவாகப் பாராட்டினார். "வலைப்பயிற்சியில் இவரை நான் முதன்முறையாகப் பார்த்தபோதே, இவர் ஒரு ஸ்பெஷலான வீரர் என்பதை உணர்ந்துகொண்டேன். எதிர்காலத்தில் இவர் பல விக்கெட்டுகளை வீழ்த்துவார்" என்று அர்ஷ்தீப் கூறினார். ஜம்மு காஷ்மீரிலிருந்து ஒரு வேகப்பந்து வீச்சாளர், தனது அசாத்திய திறமையால் இந்திய கிரிக்கெட்டின் கதவுகளைத் தட்டியிருப்பது, பல இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.